பக்கம் எண் :

மந்திரப் படலம் 19

1341. ‘பெருமகன் என்வயின் பிறக்க, சீதை ஆம்
திருமகள் மணவினை தெரியக் கண்ட யான்,
அரு மகன் நிறை குணத்து அவனி மாது எனும்
ஒருமகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன்.

     ‘பெருமகன் என்வயின் பிறக்க - ஆடவர் திலகமாகிய இராமன்
எனக்குமகனாகத் தோன்ற ;  சீதை ஆம் திருமகள் மணவினை -
சீதையாகிய திருமகளின்திருமணத்தை ;  தெரியக் கண்ட யான் -
கண்ணாரப் பார்த்து மகிழ்ந்த யான்; அரு மகன் - அந்த அரிய மகனாகிய
இராமன் ;  நிறை குணத்து அவனி மாது எனும் - நிறைந்த
குணத்தையுடைய மண்மகள் என்கிற ;  ஒரு மகள் மணமும் - ஒப்பற்ற
பெண்ணை மணம்புரிந்து கொள்ளுதலையும் ;  கண்டு உவப்ப
உன்னினேன்
- கண்ணாரக்கண்டு களிக்கக் கருதினேன்.’

     தயரதன், “இராமனுக்குத் திருமணம் நடந்ததைக் கண்டு மகிழ்ந்த
யான்,அரசுரிமை ஏற்றலையும் செய்விக்கப் பேரவாக் கொள்கிறேன்”
என்கிறான். பெருமகன், திருமகள்,அவனிமாது ஆகிய சொற்கள்,
“பெருமாளுக்குத் தேவியர் இருவருள் திருமகள் கூடியதைக் கண்டு
களித்தேன் ; இனி மண்மகள் கூடுவதனையும் காண விழைகிறேன்” என்னும்
பொருளினைத்தெரிவிப்பனவாக அமைந்துள்ளன.

     இதுவரை தயரதன் தான் துறக்க விரும்பியதற்குக் காரணங் கூறி, இது
முதல்இராமனுக்கு அவன் முடிசூட்ட விரும்பியதைக் கூறுகிறான்.       28

1342.‘நிவப்புறு நிலன் எனும் நிரம்பு நங்கையும்,
சிவப்புறு மலர்மிசைச் சிறந்த செல்வியும்,
உவப்புறு கணவனை உயிரின் எய்திய
தவப் பயன் தாழ்ப்பது தருமம் அன்றுஅரோ.

     ‘நிவப்புறு - உயர்வு பெற்ற ;  நிலன் எனும் நிரம்புநங்கையும் -
மண் என்னும் பெண்மைக் குணங்கள் நிரம்பிய தேவியும் ;  சிவப்புறு
மலர்மிசைச் சிறந்த செல்வியும்
- செந்நிறத் தாமரை மலரின்மீது
வீற்றிருக்கின்றசீதேவியும் ;  உவப்புறு கணவனை - விரும்பத்தக்க
மணாளனை ;  உயிரின்எய்திய - தம் உயிர்போல அடைவதற்குக்
காரணமான ;  தவப் பயன் -தவத்தின் பயனை ;  தாழ்ப்பது தருமம்
அன்று
- பிற்படச் செய்வது அறம் ஆகாது.’

     நிவப்புறு என்பதனை நங்கையொடும் செல்வியொடும் தனித்தனிக்
கூட்டுக.நிலமடந்தைக்கு உயர்வாவது - எல்லாப் பொருள்களையும் தாங்கும்
ஆற்றலுடைமை, வளம்முதலியவற்றால் சிறந்திருத்தல். திருமகளுக்கு
உயர்வாவது - யாவர்க்கும் செல்வப் பெருக்கைத்தந்து இம்மை மறுமை
இன்பங்களை நுகரச் செய்தல். அரோ - ஈற்றசை.

     முன் பாட்டின் கருத்தையே மறுமுறையும் வற்புறுத்தி இராமனுக்கு
முடிசூட்டும்நாளைத் தள்ளிப் போடுவது அறம் ஆகாது என்றும் ஆதலின்
விரைந்து முடிசூட்டல் வேண்டும் என்றுகூறுகிறான்.