வனம்போதல்’ என்ற இரண்டையும் கோசலை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் இராமன் வெற்றிஅடைந்தான் என்பது இதனால் போதரும். 18 கோசலை வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல் 1624. | ‘என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும் மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன் துன்னு கானம் தொடரத் துணிவதோ? அன்னையே! அறம் பார்க்கிலை ஆம்’ என்றான். |
‘அன்னையே! - தாயே; என்னை நீங்கி - என்னைப் பிரிந்து; இடர்க்கடல் வைகுறும் - துன்பக்கடலில் தங்கியுள்ள; மன்னர் மன்னனை -சக்கரவர்த்தியை; வற்புறுத்தாது - மன உறுதி செய்து தைரியப்படுத்தாமல்; உடன் -என்னோடு; துன்னு கானம் - நெருங்கிய காட்டிற்கு; தொடர - பின்பற்றிவர; துணிவதோ? - மனத்தில் நிச்சயிப்பது தகுமோ; அறம் பார்க்கிலை ஆம்! - மனைவிக்குள்ள தருமத்தை ஆராய்ந்து கருதவில்லை போலும்;’ என்றான் -. மனைவியின் தர்மம் கணவனைக் காத்தல். ‘தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற,சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்றார் வள்ளுவரும். (குறள். 56) இந்தப் பத்தினிதர்மத்தை இராமன் தன் தாய்க்கு நினைவு படுத்தினான். 19 1625. | ‘வரி வில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன் திருவின் நீங்கித் தவம் செயும் நாள், உடன், அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே! | ‘வரிவில் எம்பி - கட்டமைந்த வில்லினை உடைய என்தம்பி பரதன்; இம் மண்அரசு ஆய் - இந்தக் கோசல நாட்டுக்கு அரசன் ஆகி; அவற்கு - அந்தப் பரதனுக்கு; மாநிலம் உரிமை உற்றபின் - பெரிய இராச்சியத்தின் உரிமை நிலைப்பட்ட பிறகு; கொற்றவன் - தயரதன்; திருவின் நீங்கி - அரச போக வாழ்க்கையிலிருந்துவிலகி; தவம் செய்யும் நாள் - தவம் செய்கின்ற காலத்தே; உடன் - அவனோடு சேர்ந்து; அருமை நோன்புகள் - செயற்கரிய விரதங்களை; ஆற்றுதி ஆம் -செய்வாயாக.’ வரத்தால் அரசன் ஆயினும், மக்கள் அவன் வழிப்படவும் அவன் ஆட்சி உறுதி பெறவும்சிலகாலம் செல்லுமாகலின், ‘மாநிலம் உரிமை உற்றபின்’ என்றான் இராமன். வானப்பிரந்தநிலையில் மனைவியை உடன்கொண்டு தவம் செய்தல் உண்டாதலின் உடன்சென்று அரிய விரதங்களைச்செய்க என்றானாம். ‘அன்று’ , ‘ஏ’ அசைகள். 20 |