சுமந்திரன் கூற்று 1357. | பழுது இல் மா தவன், பின் ஒன்றும் பணித்திலன், இருந்தான் ; முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர் தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம், இறை மகற்கு ஏற்க. தொழுத கையினன், சுமந்திரன் முன் நின்று, சொல்லும் : |
பழுது இல் மா தவன் - குற்றம் இல்லாத சிறந்த தவத்தையுடை யோனாகியவசிட்டன் ; பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் - பிறகு வேறு யாதும் சொல்லாமல்இருந்தான் ; முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர் - எதனையும் தீரச்சிந்திக்கின்ற அமைச்சர்கள் ; தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம் - தம்முகத்தினால் எழுதிக் கொடுத்த குறிப்பினை ; இறை மகற்கு ஏற்க - தயரதனுக்குப்பொருந்த ; சுமந்திரன் முன் நின்று - சுமந்திரன் எதிரில் எழுந்து நின்று; தொழுத வகையினன்- கும்பிட்ட கைகளையுடையவனாய் ; சொல்லும் -சொல்வான். 44 1358. | ‘ “உறத் தகும் அரசு இராமற்கு” என்று உவக்கின்ற மனத்தைத் “துறத்தி நீ” எனும் சொல் சுடும் ; நின் குலத் தொல்லோர் மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று ; அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ? |
‘அரசு இராமற்கு உறத் தகும் என்று - இராமனுக்கு அரசுரிமை பொருந்துதல்தக்கது என்று ; உவக்கின்ற மனத்தை - மகிழ்கின்ற மனத்தை ; நீ துறத்திஎனும் சொல் சுடும் - நீ எங்களைப் பிரிகிறாய் என்னும் சொல்லானது சுடுகிறது ; நின் குலத் தொல்லோர் - உன் சூரிய குலத்தில் தோன்றிய முன்னோர்கள் ; மறத்தல் செய்திலா தருமத்தை - மறவாமல் போற்றிய அறத்தை ; மறப்பதும் வழக்குஅன்று - நீ மறந்து கைவிடுதலும் முறைமை அன்று ; இனி அறத்தின் ஊங்கு கொடிது - (ஆதலால்) இனி அறத்தைவிடக் கொடியது ; எனல் ஆவது ஒன்று யாதோ - என்று சொல்லத்தக்கது பிறிதொன்று எது? 45 |