பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 319

வீர மறத்தொழில் குறித்து  வருதலை;  ‘வீரச் சேவகச் செய்கை’ (7281) என்ற  பாடற்பகுதியால் அறிக. குந்தம் - ஒரு படைக்கலத்தின் பெயர்.  கணர் - கண்ணர் - தொகுத்தல்விகாரம்.                                   12

1852.மாக மணி வேதிகையில், மாதவி செய் பந்தர்.
கேகய நெடுங் குலம் எனச் சிலர்  கிடந்தார்;
பூக வனம் ஊடு, படுகர்ப் புளின முன்றில்,
தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார்.

     சிலர் - சில மகளிர்; மாதவி செய்பந்தர் - குருக்கத்திக் கொடியால்
அமைக்கப் பெற்ற பந்தரில்;  மாக மணி வேதிகையில் - ஆகாயத்தைப்
போன்ற நீலமணிகளால் அமைந்த திண்ணையில்;  கேகய நெடுங்குலம்
என
- மயிலின் பெருங்கூட்டம்போல; கிடந்தார் - உறங்கினார்;  சிலர் -
சில மகளிர்;  பூக வனம் ஊடு- கமுகங்காட்டின் இடையே;  படுகர் -
மடுவிடத்தில்;  புளின முன்றில் -மணல்மேடுகளில்;  தோகை இள
அன்ன நிரையின் -
தோகையுடைய இளைய அன்ன வரிசைகளைப் போல;
துயின்றார் - தூங்கினார்.

     சிலர் மயில்போல,  சிலர் அன்னம் போல உறங்கினர்.  நீலமணித்
திண்ணையில்உறங்கியவர் நீல நிற மயில் போன்றார் என்றும்,
வெண்மையான மணல் மேடுகளில்உறங்கியவர்கள் வெள்ளையான
அன்னம் போன்றார் என்றும்  கூறியது.  ஒரு நயம்.  வேதிகை -திண்ணை.
பூகம் - கமுகு.  புளினம் - மணல்மேடு.                             13

1853.சம்பக நறும் பொழில்களில், தருண வஞ்சிக்
கொம்பு அழுது ஒசிந்தன எனச் சிலர் குழைந்தார்;
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும்
அம் பவள வல்லிகள் எனச் சிலர் அசைந்தார்.

     சிலர்-; சம்பக நறும் பொழில்களில் - நறுமணம்  உள்ள சண்பகச்
சோலைகளில்; தருண வஞ்சிக் கொம்பு அழுது ஒசிந்தன என - இளைய
வஞ்சிக் கொடிகள் அழுது  முறிந்தனபோல; குழைந்தார் - சோர்ந்து
தங்கினார்கள்;  சிலர்-;  வம்பு அளவுகொங்கையொடு - கச்சு அணிந்த
தனங்களுடன்;  வாலுகம் வளர்க்கும் அம் பவள வல்லிகள்என -
மணற்குன்றுகளில் வளர்கின்ற அழகியபவளக் கொடிகள்போல; அசைந்தார்-
களைத்து  உறங்கினார்கள்.

     வாலுகம் - மணல்மேடு, முலை. பவளவல்லி - மகளிர் என உவமை
காண்க.                                                     14

1854. தகவும் மிகு தவமும் இவை
     தழுவ, உயர் கொழுநர்