மூவரும் கங்கைக் கரை அடைய முனிவர்கள் காண வருதல் கலிவிருத்தம் 1934. | பருதி பற்றிய பல் கலன் முற்றினர், மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ. சுருதி கற்று உயர் தோமிலர் சுற்றுறும் விரி திரைப் புனல் கங்கையை மேவினார். |
பருதி பற்றிய - சூரியனைப் போன்ற ஒளிபடைத்த; பல்கலன் - பல அணிகலன்களை; முற்றினர் - நிறைய அணிந்துள்ள மூவரும்; மருத வைப்பின் - வயல்நிலங்களாகிய செல்வமுடைய; வளம் கெழு நாடு ஒரீஇ - வளம் பொருந்திய நாடு கடந்து சென்று; சுருதி கற்று உயர் - வேதங்களை (இடையறாது) கற்று உயர்ந்த; தோம் இலர்- குற்றம் இல்லாத முனிவரர்; சுற்றுறும் - எப்பொழுதும் சுற்றி இருக்கப் பெற்ற; விரி திரைப்புனல் கங்கையை - விரிந்த அலைகளையுடைய நீர் நிரம்பிய கங்கையாற்றை; மேவினார் - அடைந்தார். தாம் செய்ய வேண்டிய விரத நியமங்களைச் செய்துகொண்டு, இணையாகத் தங்குதற்கு ஏற்றஇடம் ஆதலாலும், தன்னை அடைந்தாரது பாவத்தைப் போக்குதலானும் முனிவரர் கங்கையைச் சுற்றித்தங்கித் தவம் செய்வாராயினர். 9 1935. | கங்கை என்னும் கடவுள் திரு நதி தங்கி வைகும் தபோதனர் யாவரும், ‘எங்கள் செல் கதி வந்தது’ என்று ஏமுறா, அம் கண் நாயகற் காண, வந்து அண்மினார். |
கங்கை என்னும் கடவுள் திருநதி - கங்கை என்று சொல்லப்படும் தெய்வத்தன்மைஉடைய அழகிய ஆற்றின் கரையில்; தங்கி வைகும் தபோதனர் யாவரும் - தங்கிஇருக்கின்ற முனிவர்கள் எல்லாரும்; ‘எங்கள் செல் கதி வந்தது’ என்று ஏமுறா - எங்கள்மோட்ச மாகிய செல்லும் பேறு எதிர்ப்பட்டது என்று மனத்தின்கண் இன்பம் அடைந்து; அம்கண் நாயகன் காண- அருளுடைய கண்களை உடைய இராமனைக் காண்பதற்கு; வந்து அண்மினார் -வந்து அணுகினார்கள். பரம்பொருளே இராமனாக அவதரித்துள்ளமை உணர்ந்தவர் ஆதலின், ‘எங்கள் செல்கதி வந்தது’என்று முனிவரர் இன்புற்றனர் என்க. கண்ணுக்கு அழகு, அருளாதலின் ‘அம்’- அழகு எனப்பொருள்கொண்டது. 10 1936. | பெண்ணின் நோக்கும் சுவையை, பிறர் பிறர்க்கு எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை, பண்ணின் நோக்கும் பரா அமுதை, பசுங் கண்ணின் நோக்கினர், உள்ளம் களிக்கின்றார். |
|