பெண்ணின் நோக்கும் சுவையை - பெண்ணிடத்துக் கருதப்படும் ஐம்புல இன்பத்தை; பிறர் பிறர்க்கு - ஒருவர் மற்றொருவர்க்கு; எண்ணி - நினைத்து; நோக்கி -பார்த்து; இயம்ப அரும் எடுத்துச் சொல்லமுடியாத; இன்பத்தை - இன்பச்சுவையை; பண்ணில் நோக்கும் பராவமுதை - இசைவடிவான வேதத்தினால் அறியப்படும் மேலானஅமுத வடிவான பரம்பொருளை; பசுங்கண்ணின் - குளிர்ந்த கண்களால்; நோக்கினார் - பார்த்து; உள்ளம் களிக்கின்றார் - மனம் மகிழ்ச்சியடைவாராயினர். “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள” என்னும்குறளை (குறள். 1101.) நோக்கியது பெண்ணின் நோக்கும் சுவை என்பது. “ கண்டு கேட்டு உற்றுமோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்...... கண்ட சதிர் கண்டொழிந்தேன், அடைந்தேன் உண் திருவடியே” (திவ்ய. 3328) என்னும்நம்மாழ்வார், பாசுரமும் காண்க. “ஐம்புலன்கள் ஆர வந்து என்னுள்ளே புகுந்த விசைமாலமுதப்பெருங்கடல்” என்றார் இறைவனை மணிவாசகரும் (திருவா. திருச்சதகம் - 26) “எவ்வாறொருவர்க்கு இசைவிப்பது (கந்தர் அநுபூதி 30) என்று அருணகிரியாரும், “இயம்பு அரும் இன்பத்தை”என்பதனோடு ஒப்பு நோக்கத்தக்கன. பண் என்பது இசையாம், இங்கு இசை வடிவானவேதம். 11 1937. | எதிர்கொடு ஏத்தினர்; இன் இசை பாடினர்; வெதிர் கொள் கோலினர், ஆடினர்; வீரனை, கதிர் கொள் தாமரைக் கண்ணனை, கண்ணினால், மதுர வாரி அமுது என, மாந்துவார். |
வெதிர் கொள் கோலினர்- மூங்கிலால் ஆகிய தண்டத்தை உடைய முனிவர்கள்; வீரனை - இராமனை; கதிர் கொள் தாமரைக் கண்ணனை- ஒளி படைத்த தாமரைக்கண்களை உடையவனை; கண்ணினால் - தங்கள் கண்களால்; மதுர வாரி அமுது என -இனிய பாற்கடல் தந்த அமுதம் போல; மாந்துவார் - உண்டு; எதிர் கொடு -வரவேற்று; ஏத்தினர் - துதித்து; இன் இசை பாடினர் - இனிய இசை பாடி; ஆடினர் -(ஆனந்தக் களிப்பால்) ஆடினர். மது ரவாரி - பாற்கடல். வெதிர் - மூங்கில் - ஏக தண்டம், திரி தண்டம் ஏந்துதல்முனிவர் இயல்பு. “முக்கோல் கொள் அந்தணர்” (கலித். 126:4) என்பது காண்க. 12 முனிவர் தவச் சாலைக்கு அழைத்துச் சென்று உபசரித்தல் 1938. | மனையின் நீங்கிய மக்களை வைகலும் நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார், அனையர் வந்துற, ஆண்ட எதிர்ந்தார்கள்போல், இனிய மா தவப் பள்ளிகொண்டு எய்தினார். |
|