எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை -மோதுகின்ற நீரை உடைய கங்கையாற்றில் செல்லும் மரக்கலங்களுக்குத் தலைவன்; குகன் ஒருவன்- குகன் என்ற பெயரை உடைய ஒருவன்; நிமிர்ந்த கூட்டச் சுற்றமும் தானும் -பெருந்திரளாக உள்ள உறவினரும் தானுமாக; நின்னைக் காணக் குறுகினன்! - உன்னைக் காணும் பொருட்டு வந்துள்ளான்; என்றான்-. அரசரைக் காணச் செவ்வியறிந்து செல்லல் முறை ஆதலின், குகனை வெளியே நிற்கச்செய்து, இராமன்பால் தெரிவிக்கச் சென்றான் இலக்குவன். பார்த்த அளவில் தன்னையேஇராமனாக எண்ணும் குகனது வெள்ளை உள்ளத்தை அறிந்தபடியால் ‘உள்ளம் தூயவன்’ என்று முதலிற்கூறினான். உண்ணுதற்குரிய பொருள்களை என்றும் எடுத்துவருதல் தாயின் தன்மையாதலின் ‘தேனும்மீனும் கொண்டணுகிய குகனது தாயன்பைக் கருதித் ‘தாயின் நல்லான்’ என்றான். நாம்கங்கையைக் கடத்தல் வேண்டும் ஆதலின், இவனது தோழமை நமக்கு மிகவும் இன்றியமையாதது என்பதைப் புலப்படுத்த ‘நாவாய்க்கு இறை’ என்றான். இங்ஙனம் இராமன் ஏற்றுக்கொள்ளும் முன்னரேஇலக்குவன் குகனது தோழமையை ஏற்று அங்கீகரித்தான் என்னும்படி இவ்வறிமுகம் அமைந்துள்ளதுஅறிந்து இன்புறத்தக்கது. 12 குகன் இராமனைக் கண்டு பணிந்து கையுறைப் பொருளை ஏற்க வேண்டுதல் 1965. | அண்ணலும் விரும்பி, ‘என்பால் அழைத்தி நீ அவனை’ என்ன, பண்ணவன், ‘வருக’ என்ன, பரிவினன் விரைவில் புக்கான்; கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்; இருண்ட குஞ்சி மண் உறப் பணிந்து, மேனி வளைத்து, வாய் புதைத்து வின்றான். |
அண்ணலும் - இராமனும்; விரும்பி - குகனை மனத்தால் விரும்பி; ‘நீஅவனை என்பால் அழைத்தி’ என்ன - இலக்குவா? நீ அக்குகளை என்னிடம் அழைத்து வருக என்றுசொல்ல; பண்ணவன் - பண்பிற் சிறந்த இலக்குவன்; ‘வருக’ என்ன- (குகனே) வருக என்று அழைக்க; பரிவினன்- (அக்குகனும்) மனத்தில் அன்பு மிக்கவனாய்; விரைவில் புக்கான் - வேகமாக உள்ளே புகுந்து; கண்ணனை - கண்ணழகுடைய இராமனை; கண்ணின் நோக்கிக் களித்தனன் - தன் கண்களால் பார்த்து மகிழ்ச்சி அடைந்து; இருண்ட குஞ்சி - இருள் நிறமான தலைமுடி; மண் உறப் பணிந்து - பூமியில் விழுமாறுவிழுந்து வணங்கி; மேனி வளைத்து - உடம்பைக் குறுக்கிக் கொண்டு; வாய் புதைத்து -வாயினைக் கைகளால் மூடிக் கொண்டு; நின்றான்-. |