| சுமந்திரன் தடந் தேர்மிசை, சுந்தரத் திரள் தோள் அமைந்த மைந்தனம், தன் நெடுங் கோயில் சென்று அடைந்தான். | நிவந்த அந்தணர் - உயர்ந்த வேதியரும்; நெடுந்தகை மன்னர் - பெருந்தன்மை பொருந்திய அரசர்களும்; நகரத்து உவந்த மைந்தர்கள் - அயோத்தி நகரத்தில் வாழும் தன்னைக் காணுதலில் பெருமகிழ்ச்சி யடையும் இளைஞர்களும்; மடந்தையர் - பெண்களும்; உழை உழை தொடர - பக்கங்களிலே சூழ்ந்துவர; சுந்தரத் திரள்தோள் அமைந்த மைந்தனும் - அழகிய திரண்ட தோள்களையுடைய இராமனும்; தன் நெடுங் கோயில் - தனது பெரிய மாளிகையை; சென்று அடைந்தான் - போய்ச் சேர்ந்தான். நிவப்பு - உயர்வு குலம், அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றால் உயர்ந்தோர் அந்தனர் ஆவர். தாடகையைக்கொன்று, சிவன் வில்லை முறித்து, பரசுராமன் செருக்கினை அழித்ததோடு கட்டழகும் நிறைந்திருப்பவையாதலின் இராமன் தோள்கள் ‘சுந்தரத் திரள் தோள்’ என்று சிறப்பிக்கப்பட்டன. மைந்தனும் - உம்மை இறந்தது தழுவியது; தந்தை போனபின் தனயனும் சேர்ந்தான் என்பதை உணர்த்தியது. 71 தயரதன் அரசர்களுக்கு ஓலை போக்குதல் 1385. | வென்றி வேந்தரை, ‘வருக’ என்று, உவணம் வீற்றிருந்த பொன் திணிந்த தோட்டு அரும் பெறல் இலச்சினை போக்கி, ‘நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு, நல்லோய்! சென்று, வேண்டுவ வரன்முறை அமைக்க’ எனச் செப்ப, | வென்றி வேந்தரை வருக என்று - தயரதன், வெற்றி பொருந்திய அரசர்களை அயோத்திக்கு வருக என்று; பொன் திணிந்த தோட்டு - பொன்னாலாகிய ஓலையிலே; உவணம் வீற்றிருந்த - கருடனது வடிவம் பெருமையோடு திகழ்ந்த; அரும் பெறல் இலச்சினை போக்கி -பெறுதற்கு அரிய தன் அடையாள முத்திரையைவிட்டு அனுப்பி்; ‘நல்லோய் - (பின்பு வசிட்டமுனிவனை நோக்கி) பெரியீர்; சென்று -நீர் சென்று; சித்திர நளிர் முடி - சித்திர வேலைப்பாடமைந்த பெருமை தங்கிய முடியை; நன்று கவித்தற்கு -இராமனுக்கு நன்றாகச் சூட்டுதற்கு; வேண்டுவ வரன்முறை அமைக்க -வேண்டுவனவற்றை முறைப்படி அமைத்திடுக;’ எனச் செப்ப - என்று சொல்ல. |