பக்கம் எண் :

452அயோத்தியா காண்டம்

     வரிகொள் ஒண்சிலை வயவர் - கட்டமைந்த ஒள்ளிய வில்லை
உடைய வீரர்கள்;  தம் கணிச்சியின் மறித்த - தம்முடைய கோடாலிப்
படையால் வெட்டி வீழ்த்திய;  பரியகால் அகில் கூட - பருத்த கரிய
நிறமுள்ள அகில் கட்டையைச் சுடுதலால்;  நிமிர் பசும்புகைப்படலம் -
மேல் செல்லுகின்ற அடர்ந்த புகைத் தொகுதி;  அரிய வேதியர் ஆகுதிப்
புகையொடும் அளவி -
சொல்லுதற்கரிய புகழ் படைத்த அந்தணர்களது
ஓம குண்டத்திலிருந்து எழுகின்ற புகையோடும் கலந்து; கரிய மால்வரைக்
கொழுந்து எனப் படர்வன -
கரியநிறமுள்ள பெரிய மலைச்சிகரங்களைப்
போல வானத்தில் படர்ந்து  செல்லுகின்றவற்றை;  காணாய் -.

     வேடுவர் அகில் சுட்ட புகைம்,  வேதியர் வேள்விப் புகையும்,  ஒன்று
கலந்து மலைச்சிகரம் போல் உள்ளது  என்பதால் மறமும் அறமும் கலந்து
விளங்குவதைக்குறிப்பிட்டார்.                                    18

2064.‘நானம், நாள்மலர், நறை, அகில்,
     நாவி, தேன், நாறும்
சோனை வார் குழற் சுமை பொறாது
     இறும் இடைத் தோகாய்!
வான யாறு மீன் மலர்ந்தன
     எனப் புனல் வறந்த
கான யாறுகள் கதிர் மணி
     இமைப்பன - காணாய்!

     நானம், நாள்மலர், நறை, அகில், நாவி, தேன், நாறும் சோனை
வார் குழல்சுமை பொறாது -
புழுகு, அன்றலர்ந்த மலர், மணப் பொருள்,
அகிற்புகை, கத்தூரி, தேன்இவற்றைப் பெற்று மணம் வீசும் திரண்ட நீண்ட
கூந்தல் பாரத்தைத் தாங்க மாட்டாமல்;  இறும் இடைத்தோகாய் -
ஓடிகின்ற இடையினை உடைய மயில் போன்றவளே!; வான யாறு - வான
வழியில்;  மின் மலர்ந்து என - நட்சத்திரங்கள் தோன்றின என்னும்படி;
புனல் வறந்த கான யாறுகள் - நீர் வற்றிப் போன காட்டாறுகளில்;  கதிர்
மணி இமைப்பன-
ஒளியுடைய மணிகள் விட்டு விளங்குகின்றவற்றை;
காணாய் -.

     நானம் முதலியன கூந்தலுக்கு ஊட்டும் மண விசேடமாம். வான யாறு-
தேவகங்கை என உரைத்து அதில் வண்ண மீன்கள் போல எனலும் ஆம். 19

2065.‘மஞ்சு அளாவிய மாணிக்கப்
     பாறையில் மறைவ,
செஞ்செவே நெடு மரகதப்
     பாறையில் தெரிவ.