பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 491

தன்மையாகிய அறியாமையுடைய மையுண்ட பார்வையுடையவரும்  மயிலைப்
போலும் சாயலுடையவரும் ஆயமகளிர்; கூழை
- தலைக் கூந்தலை;
போன்ற - போன்றன.

     கூந்தல் கருநிறம்  உடையது.  நரம்பு போலும் தோற்றம் உடையது.
இசை இசைக்காது - இசைஇசையாத கருநிறம் உடைய வண்டுகளும்,
நரம்புடைய யாழும் அது போன்றன என்றார். ஏழ் அமைந்தஇசை,  குரல்,
துத்தம்,  கைக்கிளை,  உழை,  இளி,  விளரி,  தாரம் என்னும் எழுவகைச்
சுரத்தானங்கள்,  ச ரி க ம ப த நி எனலும் ஆம்.  மாழை - இளமை
என்னும் பொருட்டு. அது இளமைத்தன்மையாகிய அறியாமையைக் குறித்தது.
“மாழை மான் மட நோக்கி உன் தோழி” (திவ்வியப்.1418) என்பது  இங்கு
ஒப்பு நோக்கத் தக்கது. ‘ஏ’ ஈற்றசை.                              34

இயக்கம் இன்மையால் அழகு இழந்த வீதிகள்  

2136. தேரும், மாவும், களிறும், சிவிகையும்,
ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால்,
யாரும் இன்றி, எழில் இல; வீதிகள்,
வாரி இன்றிய வாலுக ஆற்றினே,

     தேரும் - தேர்களும்; மாவும் - குதிரைகளும்; களிறும் -
யானைகளும்;  சிவிகையும் - பல்லக்குகளும்; ஊரும் பண்டியும் - (மக்கள்)
ஏறிச்செல்லுகின்ற வண்டிகளும்; ஊருநர் இன்மையால் - ஏறிச் செல்பவரும்
செலுத்துபவரும்  இன்மையால்; வீதிகள் - (அயோத்திநகரின் ) தெருக்கள்;
வாரி இன்றிய -நீர்வருவாய் இல்லாது போன; வாலுக ஆற்றினே -
வெண்மணற் பரப்பையுடைய ஆற்றைப் போல;யாரும் இன்றி- இயங்குபவர்
எவரும் இல்லாமல்;  எழில் இல - அழகு இழந்தன.

     நீரற்ற வெறுமணல் பரவிய நதி - இயக்கம் அற்ற வீதிகளுக்கு உவமை
ஆயிற்று; உவமையணி.வாலுகம்- வெண்மணல். வாரி - வருவாய். யாற்றுக்கு
வருவாய் நீர் ஆதலின் நீர் எனப் பொருள்உரைத்தாம்.  வீதிக்கு அழகு
மக்கள் இயங்குதல் ஆகலின் யாரும் இயங்காத வீதிகள் அழகிழந்தன
என்றார். ‘ஏ’ ஈற்றசை.                                          35

நகரை நோக்கிய பரதன் வினா  

2137.அன்ன தன்மை அக நகர் நோக்கினள்,
பின்னை, அப் பெரியோர்தம் பெருந்தகை,
‘மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது?
என்ன தன்மை? இளையவனே!’ என்றான்.

    அப் பெரியோர்தம் பெருந்தகை- அறிவு ஒழுக்கங்களாற் சிறந்த
பெரியோர்களாற் போற்றப்படும் பெருமையுடைய குணத்தாற்