பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 493

 ஒரு வகைத்து அன்று உறு துயர்; ஊழி வாழ்
திரு நகர்த் திரு தீர்ந்தனள் ஆம்’ என்றான்.

     குரு மணிப் பூண் - நிறம் அமைந்த மணிக் கற்கள் அழுத்திய
அணிகளை (அணிந்த); அரசு இளங் கோளரி- அரசிளஞ் சிங்கம் ஆகிய
சத்துருக்கனன்;  இரு கை கூப்பிஇறைஞ்சினன் - தன் இரண்டு
கைகளையும் குவித்து (ப் பரதனை) வணங்கி;  (இப்போது இந்நகரின்
நிலையைப் பார்த்தால்) ‘எய்தியது உறு துயர் - நேர்ந்துள்ள மிக்கதுயரம்;
ஒரு வகைத்து அன்று - ஒரு தன்மைப்பட்டது  அன்று; (அன்றியும்) ஊழி
வாழ்
- கற்ப முடிவுக்காலம் வரையும் வாழக்கூடிய; திருநகர் திரு - சிறந்த
இந்த நகரத்துச்சீதேவி (திருமகள்); தீர்ந்தனள் ஆம்’ - நகரத்தை விட்டு
அடியோடு போய்விட்டான்ஆகும்; என்றான் -.

     எல்லாரினும்  இளையவனும்,  தயரத மாமன்னனின் மகனும் ஆதலின்
சத்துருக்கனன் ‘அரசிளங்கோளரி’ எனப் பெற்றான்.  மூத்தோர்பால் ஒன்று
சொல்லும் போது வணங்கிக் கூறல் மரபு. உறு -மிகுதி. “அவைதாம், உறு,
தவ, நனி என வரூவும் மூன்றும், மிகுதி செய்யும் பொருள என்ப” (தொல்-
சொல் உரி. 3) என்பது  காண்க. ஊழி வாழ்தலை நகர்க்கும், திருவுக்கும்
ஏற்புழிஏற்றிக் கொள்க.                                        38

பரதன் தயரதன் வாழுமிடத்தை அடைதல்  

2140.அனைய வேலையில், அக் கடைத் தோரண
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள்
நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான்
தனையனும், தந்தை சார்விடம் மேவினான்.

     அனைய வேலையில் - இவ்வாறு  உரையாட்டு நிகழும் பொழுதில்;
அக்கடைத் தோரணமனையின்
- அந்த வாயிலிற் கட்டிய தோரணக்
கொடிகளையுடைய மாளிகைகளால்; நீள் நெடுமங்கல வீதிகள் -
நெடிதுயர்ந்த மங்கலம் பொருந்திய தெருக்களை;  நினையும்மாத்திரத்து -
நினைக்கும் பொழுதிற்குள் (கணப் பொழுதில்);  ஏகிய - கடந்து  சென்ற;
நேமியான் தனையனும் - சக்கரவர்த்தி தயரதன் குமாரனாகிய பரதனும்;
தந்தை - தன்தந்தையாகிய தயரதன்;  சார்வு இடம் - வழக்கமாகத்
தங்கியுள்ள அரண்மனையை;  மேவினான் - சென்று அடைந்தான்.

     நேமி - சக்கரம்.  நேமியான் - ஆணைச் சக்கரம்  உடைய அரசன்;
இங்குத் தயரதன்.பரதன் தான் கண்ட காட்சிகளால் முன்பே  “மன்னன்
வைகும் வளநகர் போலும் ஈது?” என்று (2137)ஐயப்பட்டான் ஆதலின்,
அரசனை முதலிற் பார்க்க விரும்பினான். நெடுந் தெருக்கள் பல கடந்து
அரச மாளிகையை அடைந்தான் என்க.                            39