மராமரம்- ஓங்கி வளர்ந்த மராமரமானது; மறிந்து மண் உற்றென்ன - ஒடிந்து மண்ணிலே விழுந்ததுபோல; நெடிது வீழ்ந்தனன் - நீண்டு விழுந்த; அறிந்திலன் - அறிவு கெட்டு; உயிர்த்திலன் - மூச்சற்றவனாய்க் கிடந்தான். இடியேறுண்ட மராமரம் கைகேயி சொற்கேட்டு வீழ்ந்த பரதனுக்கு உவமை ஆயிற்று, அசனி -இடி-இடிஏறு என்பது ஆண்மை மிக்க இடி எனப்பெறும்; அஃதாவது பேரிடி. ‘ஏ’ ஈற்றசை. 45 பரதன் தாயைக் கடிந்து பேசுதல் 2147. | வாய் ஒளி மழுங்க, தன் மலர்ந்த தாமரை ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர, ‘தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல், நீ அலது உரைசெய நினைப்பார்களோ?;’ என்றான் |
(பரதன் தேறி) தன் வாய் ஒளி மழுங்க - தன் முகவொளி மங்கிப் போகவும்; மலர்ந்த தாமரை ஆய் மலர் நயனங்கள் - அன்றலர்ந்த தாமரையின் ஆராய்ந்த அழகுமலர் ஆகியகண்கள்; அருவி சோர்தர - நீரை அருவியாகச் சொரியவும்; (தாயை நோக்கி) ‘செவியில் - காதுகளில்; எரிதீ வைத்த அனைய தீய சொல் - எரிகின்ற நெருப்பைவைத்தது போன்ற கொடுஞ் சொற்களை; உரைசெய - பேசுதற்கு; நீ அலது - நீ அல்லாமல்; நினைப்பரோ? - (பிறர்) நினைப்பார்களோ?;’ என்றான்-. கைகேயியின் கல்நெஞ்சு ‘வருத்தல் நீ’ என்ற (2145) உரையால் வெளிப்படுதலின், நீ அலதுபிறர் உரைசெய்ய நினையவும் மாட்டார்; பேசுவது எங்ஙனம் என்றான். கைகேயிநினைத்ததோடன்றிப் பேசவும் செய்தனள் என்ற அவள் கொடுமையை ‘நினைப்பரோ’ என்ற பரதன்வினா புலப்படுத்தியது. ‘ஓ’ வினாப்பொருட்டு; ‘நினையார்’ என்பது விடை. 46 துயர் மிகுதியால் பரதன் புலம்புதல் 2148. | எழுந்தனன், ஏங்கினன்; இரங்கிப் பின்னரும் விழுந்தனன்; விம்மினன்; வெய்து உயிர்த்தனன்; அழிந்தனன்; அரற்றினன்; அரற்றி, இன்னன மொழிந்தனன், பின்னரும் - முருகன் செவ்வியான்; |
முருகன் செவ்வியான்- முருகனை ஒத்த பேரழகு உடைய பரதன்; ஏங்கினன் எழுந்தனன்- (விழுந்து கிடந்ததரையில் இருந்தும்) ஏக்க முற்று எழுந்து; இரங்கி - மனம் வருந்தி; பின்னரும் விழுந்தனன் - மீண்டும் கீழ்விழுந்து; விம்மினன் - மனம் பொருமித் துடித்து; வெய்து உயிர்த்தனன் வெப்பமாகப் பெருமூச்சு விட்டு; அழிந்தனன் - |