இராமனை வணங்கினாலன்றித் துயர் போகாது எனல் 2159. | ‘எந்தையும், யாயும், எம் பிரானும், எம் முனும், அந்தம் இல் பெருங் குணத்து இராமன்; ஆதலால், வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால், சிந்தை வெங் கொடுந் துயர் தீர்கலாது’ என்றான். |
எந்தையும் - என் தந்தையும்; யாயும் - என் தாயும்; எம்பிரானும்- என் கடவுளும்; எம்முனும் - என் அண்ணனும்; அந்தம் இல் பெருங்குணத்து இராமன் - எல்லையில்லாத பெருங்குணங்களை யுடைய இராமபிரானே யாவன்; ஆதலால்-; அவன் கழல் - அவனுடைய திருவடிகளை; வந்தனை வைத்த போது அலால் - வணங்குதல் செய்தபோது அல்லாமல்; சிந்தை - என் மனத்து; வெங்கொடுத்துயர் - (தந்தையின் இறப்பினால் உண்டாகிய) மிகக் கொடிய துன்பம்; தீர்கலாது - நீங்காது; என்றான்-. மகன், அடியான், தம்பி என்னும் மூன்று நிலைகளில் தன்னை இராமனுக்கு ஆட்படுத்திக்கொண்டஅன்பு சான்ற பரதனை இங்கே காண்கிறோம். ‘அந்தம் இல் பெருங்குணம்’ (2143) ஒப்பு நோக்குக. “தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால், மனக்கவலை மாற்றல் அரிது” என்னும்குறளை (குறள் 7) இச்செய்யுளின் பின்னிரண்டு அடிகளொடும் ஒப்புநோக்குக. 58 கைகேயி இராமன கானகம் சென்றமையைக் கூறுதல் 2160. | அவ் உரை கேட்டலும், அசனிஏறு என, வெவ் உரை வல்லவள், மீட்டும் கூறுவாள்; ‘தெவ் அடு சிலையினாய்! தேவி, தம்பி, என்று இவ் இருவோரொடும் கானத்தான்’ என்றாள். |
அவ் உரை கேட்டலும்- (பரதன் கூறிய) அவ் வார்த்தைகளைக் கேட்டவுடனே; அசனி ஏறு என - பேரிடிபோல; வெவ் உரை வல்லவள்- கொடுஞ்சொற்களைச் சொல்லும் ஆற்றல் படைத்தவளாய கைகேயி; மீட்டும் கூறுவாள் - மறுபடியும் கூறத் தொடங்கி; ‘தெவ் அடு சிலையினாய்! - பகைவரைக் கொல்லும் வில்லுடைய பரதனே! (இராமன்) தேவி; தம்பி என்று இவ் இருவோரொடும் - தன் மனைவியும், தம்பியும் ஆகிய சீதை, இலக்குவன் ஆகிய இந்த இரண்டு பேரோடும்; கானத்தான் - காட்டின்கண் உள்ளான்;’ என்றாள்-. ‘அசனி ஏறு’ போலக் கொடுஞ்சொல் கூற வல்லவள் கைகேயி என்றார். இது இப்படலத்து 45ஆம் பாடலிலும் வந்துள்ளது. இராமன் ஒருவனே காடு செல்ல வேண்டியவன் ஆதலின் ‘கானத்தான்’ என்றுகூறி, இருவரும் தம் விருப்பத்தால் தாமே உடன் சென்றனர் என்பது தோற்ற, ‘இவ் இருவோரொடும்’ என்று அவர்கள் இருவரையும் குறித்தாள். 59 |