பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 509

     கைகேயியின் கடுஞ்சொல் கேட்கப் பிடிக்காமல் பரதன் செவிகளைப்
பொத்தினன். புருவம்வளைதல் மேலும் கீழுமாதல், மூச்சுக்காற்று வெப்பமாய்
வெளிப்படுதல், கண் கோவைப்பழம் போல்சிவத்தல் (உதிரம் கான்றல்)
இவை சினத்தின் மெய்ப்பாடுகளாம். ‘ஏ’ ஈற்றசை.                     65

2168.துடித்தன கபோலங்கள்; சுற்றும் தீச் சுடர்
பொடித்தன மயிர்த் தொளை; புகையும் போர்த்தது;
மடித்தது வாய்; நெடு மழைக் கை, மண் பக
அடித்தன, ஒன்றொடு ஒன்ற அசனி அஞ்சவே.

     சுபோலங்கள் - கன்னங்கள்; துடித்தன - துடித்துக்கொண்டிருந்தன;
மயிர்த் தொளை - மயிர்க்கால் கண்களில்;  சுற்றும் - எப்பக்கமும்;
தீச்சுடர் - நெருப்புப் பொறிகள்; பொடித்தன - அரும்பின; புகையும்
போர்த்தது
- புகை கிளம்பி (நாற்புறமும்) மூடிற்று; வாய் மடித்தது - வாய்
மடித்துக்கொண்டது; மழை நெடுங்கை - மழை போன்ற வள்ளன்மையுடைய
நீண்ட கைகள்; அசனி அஞ்ச - இடியும் அஞ்சும்படி (பெரிய ஒலி
உண்டாகும்படி); மண்பக ஒன்றொடு ஒன்றுஅடித்தன - பூமி வெடிக்கும்படி
ஒரு கையோடு ஒரு கை மோதி அடித்தன.

     கன்னம் துடித்தல், மயிர்க்கால் மூலம் வெப்பம் பரவல், வாய் மடித்தல்,
கையை அடித்தல் சினத்தின் அறிகுறிகளாம். ‘ஏ’ ஈற்றசை.              67

2169.பாதங்கள் பெயர்தொறும், பாரும் மேருவும்,
போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு,
மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே.

     பாதங்கள் - (சினங்கொண்ட  பரதனது) கால்கள்; பெயர்தொறும் -
தரையில்  மாறிமாறி வைக்கப்படுந்தோறும்; பாரும் மேருவும் - மண்ணும்
மேரு மலையும்; மாதங்கம் வரு கலம் -யானையை ஏற்றிவருகிற மரக்கலம்;
கால் பொர - (கழற்)காற்று மோத; போதம் கொள் - கலத்தைச்
செலுத்தும் அறிவைத் தன்பாற் கொண்ட;  தனி நெடும் பொரு இல்
கூம்பொடு
- தனித்த நீண்ட ஒப்பற்ற பாய்மரத்துடனே; மறுகி- சுழன்று;
ஓதம் கொள் கடலினின்று - நீர்ப்பெருக்கைக் கொண்ட  கடலிலிருந்து;
உலைவ போன்ற - தடுமாறி வருந்துவ போன்ற.

     யானை யேற்றிய கலம் பாய்மரத்தோடு காற்றால் கடலில்
நிலைதடுமாறல், மேருமலையோடும கூடியபூமி பரதன் பாதம் பெயர
நிலைதடுமாறலுக்கு உவமை ஆயிற்று. யானை - மேரு,  மரக்கலம் - பூமி,
பரதன் பாதம் - பாய்மரம் என ஒப்புரைக்க. கப்பலைத் திசையறிந்து காற்றின்
போக்கறிந்து செலுத்துவது பாய்மரம் ஆதலின் “போதங் கொள் கூம்பு”
என்றார்.                                                     68