பக்கம் எண் :

510அயோத்தியா காண்டம்

2170.அஞ்சினர் வானவர்; அவுணர் அச்சத்தால்
துஞ்சினர் எனைப் பலர்; சொரி மதத் தொளை
எஞ்சின, திசைக் கரி; இரவி மீண்டனன்;
வெஞ் சினக் கூற்றும், தன் விழி புதைத்ததே!

     (பரதன் பெருங் கோபம் கண்டு) வானவர் அஞ்சினர் - தேவர்கள்
பயந்தார்கள்; எனைப்பலர் அவுணர் அச்சத்தால் துஞ்சினர் -
எத்துணையோ பலராய அசுரர்கள் பயத்தால்இறந்தனர்;  திசைக் கரி -
திக்கு யானைகள்;  மதம் சொரிதொளை - மதம்சொரிகின்ற மிகப் பல
தொளைகள்;  எஞ்சின - தூர்ந்துபோகப் பெற்றன; இரவி -சூரியன்;
மீண்டனன் - மறைந்து போனான்; வெஞ்சினக் கூற்றும் - இயல்பிலேயே
கொடுஞ்சினம் உடைய யமனும்; தன் விழி புதைத்தது - தன்னுடைய
கண்களை (பரதனைக் காணஅஞ்சி) மூடிக் கொண்டான்.

     அமுதுண்ட வானவர் அஞ்சினர்; அமுதுண்ணாத அவுணர் பயத்தால்
துஞ்சினர்; அமரர் - மரிக்கும்தன்மை அற்றவர். பரதன் சீற்றத்தை உயர்வு
நவிற்சியாக வருணித்தார். ‘ஏ’ஈற்றசை.                            69

பரதன் இராமனுக்கு அஞ்சித் தாயைக் கொல்லாது விடுதல்  

2171. கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
‘நெடியவன் முனியும்’ என்று அஞ்சி நின்றனன்;
இடிஉரும் அனைய வெம் மொழி இயம்புவான்;

    கொடிய வெங் கோபத்தால்- (பொங்கிப் புறப்பட்ட) மிகக் கொடிய
வெகுளியால்; கொதித்த
- (மனம்) சூடேறிய;கோளரி - சிங்கமாகிய பரதன்;
கடியவள் - கடும்செயல் செய்தவளாகியகைகேயியை; ‘தாய்’ எனக்
கருதுகின்றிலன்
- (தன்னுடைய) தாய் என்றுநினைக்கவில்லை (ஆயினும்
இவளைக் கொன்றால்); நெடியவன் முனியும் - மூத்தோனாகியஇராமன்
கோபிப்பான்; என்று அஞ்சி நின்றனன் - என்று கருதிப் பயந்து
கொல்லாமல்(தடைப்பட்டு) நின்றான்;  இடி உரும் அனைய - பேரிடியை
ஒத்த; வெம் மொழி - கொடியசொற்களை; இயம்புவான் - சொல்லத்
தொடங்கினான்.

     தன் மகனுக்குப் பழிவரும் செயலைச் செய்தவள் ஆதலின் தாய்
அல்லள்; கொடுஞ்செயல்செய்தாள் ஆதலின் கொல்ல வேண்டும். ஆனால்,
கொன்றாலும் அது இராமனுக்கு உவப்பாகாது என்பதுகருதிக் கொல்லாமல்
விட்டான் என்றார். பரதன் தாயாகிய கைகேயியைக் கொல்லநினைத்ததற்கும்.
கொல்லாமல் விட்டதற்கும் இராமன்மாட்டுக் கொண்ட பக்தியே காரணமாதல்
அறிக. இடி உரும்-ஒரு பொருட் பன்மொழி. 2298, 2325-ஒப்பிட்டுணர்க.  70