தடுத்தல் செய்து பிடித்து வைத்துக் கொள்கிலிர்; பிழைத்திர் - பிழை செய்துவிட்டீர்;’ எனும் - என்று சொல்வானாயினன். இராமனே அரசன் என்பதைக் கோசலைக்கு உறுதிப்படுத்தம் முகமாக, ‘படித்தலம் காவலன்’ என்றுஇராமனைக் குறிப்பிட்டான். ‘பிழைத்திர்’ என்பதற்கு ‘உம்மால் இனி உயிர் வாழ இயலுமோ’என்று கோசலையைக் கேட்டதாகவும் கொள்ளலாம். ‘ஆல்’ அசை. 91 2193. | ‘கொடியவர் யாவரும் குலங்கள் வேர்அற நொடிகுவென் யான்; அது நுவல்வது எங்ஙனம்? கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன், முடிகுவென், அருந் துயர் முடிய’ என்னுமால், |
‘யான்-; கொடியவர் யாவரும் - (இராமனைக் காடு செல்லச் செய்த) கொடியவர்கள்எல்லோரும்; குலங்கள் வேர் அற - தம் குலங்களோடு வேர் அற்றுப் போகும்படி; நொடிகுவென் - அழித்து விடுவேன்; அது நுவல்வது எங்ஙனம்? - அதுபற்றிச் சொல்வது என்னபயன் உடையது; (செயலின்தான் அறிய வேண்டும்); கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் - (எல்லோரையும் அழித்துவிட்டு இறுதியில்) கொடிய கைகேயி வயிற்றில் பிறந்தவஞ்சகனாகிய யானும்; அருந்துயர் முடிய முடிகுவென்’- என்னுடைய பொறுத்தற்கரிய துன்பம்இல்லையாம்படி இறந்துபடுவேன்;’ என்னும் - என்று சொல்வான். மிகுதியான துன்பத்தால் பேசுகிறான் ஆதலின், ‘கொடியவர்களையும் அழித்து, நானும்இறந்துபடிவேன்’ என்றான். ‘ஆல்’ ஈற்றசை. 92 2194. | ‘இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ் வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம், “பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால் - மரதக மலை என வளர்ந்த தோளினான். |
மரகத மலை என வளர்ந்த தோளினான்- மரகத மலை போல வளர்ந்த பச்சை வண்ணமான தோளை உடைய பரதன்; ‘பார் இருளை இரதம்ஒன்று ஊர்ந்து நீக்கும் அவ்வரதனில் - இந்த மண்ணில் உள்ள இருட்டை ஒரு தேரினை ஊர்ந்து சென்று அடியோடு போக்கும் அந்த மேன்மையுடைய சூரியனால்; ஒளிபெற மலர்ந்த தொல்குலம் - ஒளிபெற்றுப் பாரம்பரியமாக மலர்ந்து சிறந்த இப்பழமையான அரசகுலம்; ‘பரதன்’ என்று ஒருபழி படைத்தது; - இப்போது பரதன் என்ற பெயரை உடைய ஒரு பழியையும் உண்டாக்கியது;’ என்னும் - என்று சொல்வான். |