பக்கம் எண் :

536அயோத்தியா காண்டம்

2215.‘ஏற்றவற்கு, ஒரு பொருள் உள்ளது, இன்று என்று
மாற்றலன், உதவலன், வரம்பு இல் பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக்
கூற்று உறு நரகின் ஒர்கூறு கொள்க, யான்.

    ‘யான்-; ஏற்றவற்கு- தன்னிடம் வந்து யாசித்தவனுக்கு; ஒரு பொருள்-
ஒரு பொருளை; உள்ளது என்று உதவலன் -இருக்கிறது என்று சொல்லிக்
கொடுக்காமலும்; இன்று என்று மாற்றலன் - இல்லை என்றுசொல்லி
(அவர்களைத் தம்பால் வருதலைப்) போக்காமலும்; வரம்பில் பல்பகல்
ஆற்றினன்உழற்றும் ஓர் ஆதன்
- கணக்கில்லாத பல நாள்கள் செய்து
அவனை அங்கும் இங்குமாக உழல(திரிய)ச் செய்யும் ஒரு கொடிய பாவி;
எய்தும் அக்கூற்று உறு நரகின் - அடைகி்ன்றஅந்த யமவாதனை
நிரம்பிய நரகத்தில்; ஓர் கூறு கொள்க - ஒரு பங்கினை நானும்
பெறுவேனாக.’

     ‘ஒல்லுவது ஒல்லும் என்றலும் யார்க்கும், ஒல்லாது இல்லென
மறுத்தலும் இரண்டும் ஆள்வினைமருங்கிற் கேண்மைப் பால; ஒல்லாது
ஒல்லும் என்றலும் யார்க்கும், ஒல்லுவது இல்லென மறுத்தலும்வல்லே,
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்”
(புறநா.196.) என்பதும் “இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும் வசை
அன்று; வையத் தியற்கை; நசை அழுங்நின்று ஓடிப் பொய்த்தல்.....குற்றம்
உடைத்து” (நாலடி. 111.) என்பதும் இங்கு ஒப்பு நோக்குக.ஆதன் - மூடன்,
அறிவீனன், பசுப் போன்றவன் என்றும் பொருள்கூறுலாம்.           114

2216.‘பிணிக்கு உறு முடை உடல் பேணி, பேணலார்த்
துணிக் குறு வயிர வாள் தடக் கை தூக்கிப் போய்,
மணிக் குறு நகை இள மங்கைமார்கள் முன்,
தணிக்குறு பகைஞரைத் தாழ்க, என் தலை.

     ‘பேணலார்த் துணி - பகைவர்களைத் துண்டு படுத்துகின்ற;
குறுவயிரவாள்- சிறிய வலிமையான வாளை; தடக்கை தூக்கிப்போய்- நீண்ட
கைகளில் (வீரபராக்கிரமத்தோடு) தூக்கிச்சென்ற; (பின்மாட்டாமையால்)
பிணிக்கு உறு முடை உடல் பேணி
- நோய்களுக்கு இடமாக(நின்று
சாவதாக) உள்ள நாற்றம் பிடித்த உடலைப் பாதுகாத்து (உயிர் வாழ
விரும்பி); மணிகுறு இள நகை மங்கைமார்கள் முன் - முத்துமணி
போன்ற இளைய புன் சிரிப்பினையுடைய மகளிர்முன்னால்; தணிக்குறு
பகைஞரை
- நம்மால் தாழச் செய்யப்பட வேண்டிய பகைவர்களை; என்
தலை தாழ்க
- என்தலை வணங்குவதாகுக.

     போரில் இறவாமல் பாதுகாத்தாலும் இந்த உடல் நிலையற்றது;
நோயால் இறந்து படக்கூடியதே, அதனைப் பாதுகாத்து மானம் கெட்டு
உயிர்வாழ்வதை விட, உயிரைப்போரில்விட்டு வீரனாக இறப்பதே மேல்
என்றான். தாழ்க்க.