என்றலுமே - என்று பரதன் கூறிய - அளவிலேயே; அடியின் மிசை -கோசலையின் திருவடிமேல்; நெடிது - நெடுநேரம்; வீழ்ந்து - நிலம்தொட்டு வீழ்ந்து; அழுவானை - அழுகின்ற குகனை; கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி - கன்றைப்பிரிந்த காராம் பசுவின் (துன்பம் போன்று மகனைப் பிரிந்த) துன்பத்தை உடைய கொடி போல்பவளாகிய கோசலை; ‘இவன் யார்?’ என்று வினவ - (இதோ காலில் விழுந்துகிடக்கிற) இவன் யார்? என்று கேட்க; கழல் கால் மைந்தன் - வீரக் கழலணிந்த கால்உடைய பரதன்; ‘இந் நின்ற குரிசில் - இதோ தொழுது நிற்கின்ற ஆண்மகன்; இராகவனுக்கு இன்துணைவன் - இராமனுக்கு இனிய சகோதரன்; இலக்குவற்கும் இளையவற்கும்எனக்கும் மூத்தான் - இலக்குவனுக்கும் சத்துருக்கனனுக்கும், எனக்கும் அண்ணன்; குன்றுஅனைய திருநெடுந் தோள் குகன் என்பான்’ - மலையொத்த திரண்ட அழகிய நெடிய தோள்களைஉடைய குகன் என்ற பெயரை உடையவன்; என்றான் - “கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள்”(1618) என்று முன்பும் இராமன் காடு சேறல் கேட்ட அளவில் துயருற்ற கோசலைக்கு இவ்வுவமைகூறினார் ஆதலின், காடு போன பிறகு இங்கே அதனையே வாங்கிக் கூறினார். காரா - காராம் பசு. தூய்மையும் சிறப்பும் நோக்கிக் காராவைக் கூறினார். இனி, பிற பசுக்களின் பால் மனிதர்உண்ணுதற்காதலின் அவை மனிதர்க்கும் கன்றுக்கும் பால் தருவன; ஆனால், காராவின் பால் மனிதர் உண்ணுதற்காகாது ஆதலின், கன்றுக்கே முழுதும் பயன்படுதலின் அன்பின் செறிவு ஆண்டுமிகுதியாம் என்பது கருதிக் கூறினார் எனலாம். இராமனுக்கு அடுத்த தம்பி குகன் என்று கூற, பின்னர்த் தங்கள் மூவரையும் பரதன் வரிசைப் படுத்தினான். கோசலாதேவி கேட்கும்போதுவீழ்ந்து அழுவானாயிருந்தான் என்றும், பரதன் பதில் உரைக்கத் தொடங்கும்போது அருகில் எழுந்துநின்றான் என்றும் குகனைக் கருதலாம். அதுபற்றி ‘இந்நின்ற குரிசில்’ என்றானாம். 65 கோசலை குகனை அவர்களுக்குச் சகோதரனாக்கி உரைத்தல் 2368. | ‘நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்; நாடு இறந்து காடு நோக்கி, மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே! விலங்கல் திண்தோள் கை வீரக் களிறு அனைய காளை இவன் தன்னொடும் கலந்து, நீவிர் ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங் காலம் அளித்திர்’ என்றாள். |
(அதுகேட்ட கோசலை அவர்களைப் பார்த்து); ‘மைந்தீர்’ - என் பிள்ளைகளே!; இனித் துயரால் நைவீர் அலீர் - இனிமேல் நீங்கள் துன்பத்தால் வருந்தாமல்இருப்பீர்களாக; மெய்வீரர் - சுத்த வீரர்கனாகிய |