பக்கம் எண் :

66அயோத்தியா காண்டம்

மாய்ப்பது என்?- அழிப்பது  என்ன பயனைத் தரும்;  மூ உலகத்தினும் -
மூன்று  உலகங்களிலும்;  முன்புபின்பு இன்றி -  தனக்கு மேம்பட்டதும்
பிற்பட்டதும் இல்லாமல் சிறந்து  நிற்கிற; அன்பின் - அன்பைவிட; நல்லது
ஓர் ஆக்கம்
- நல்லதாகிய ஒரு செல்வம்; உண்டாகுமோ- உளதாகுமோ’
(இல்லை என்றபடி.)

     இந்திரிய வசம்  செய்வதைவிட அன்புடையராயிருத்தல் யார்க்கும்
பெருஞ் செல்வம் ஆகும் என்பதாம். “உரிவை தைஇய  ஊன் கெடு
மார்பின், என்பு எழுந்து  இயங்கும் யாக்கையர்” என்ற (முருகு 12 9 -130)
அடிகளையொட்டி ‘என்பு தோல் உடையார்’  என்ற முனிவரரை அறிக. 
தேவர்கள்புண்ணிய சரீரம் உடையவர்,  பூதபௌதிக   உடம்பு  உடையவர்
அல்லர் ஆதலின் ‘இலார்க்கும்’  என்றார். ‘முன்பு,  பின்பு இன்றி’  இறந்த
காலத்தும்,  எதிர்காலத்தும்  இல்லாமல் நிகழ்காலத்தும் அன்பின்நல்ல
ஆக்கம்  இல்லை என உரைத்து,  முக்காலத்திற்கும் ஒப்ப உயர்ந்த ஆக்கம்
அன்பே என்றார்எனலும் ஆம்.                                 24

1423. ‘வையம்ம மன் உயிர் ஆக, அம் மன் உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு,
ஐயம் இன்றி, அறம் கடவாது, அருள்
மெய்யில் நின்றபின், வேள்வியும் வேண்டுமோ?

     ‘வையம் - உலக மக்கள்; மன் உயிர் ஆக - நிலைத்த உயிராக;
அம்மன் உயிர் - அந்த நிலைத்த உயிர்களை; உய்ய - வாழும்படி; 
தாங்கும் -சுமக்கின்ற;  உடல் அன்ன மன்னனுக்கு - உடம்பை ஒத்த
அரசனுக்கு; ஐயம் இன்றி- மேற்கொண்ட நெறியின் உறுதிபற்றிய சந்தேகம்
இல்லாமல்;  அறம் கடவாது அருள் மெய்யில் நின்றபின் - அறத்தை
விட்டு விலகாது அருளிலும்,  சத்தியத்திலும் நிலைபெற்று  நின்ற பிறகு;
வேள்வியும் வேண்டுமோ - யாகங்களும் செய்தல் வேண்டுமோ’
(வேண்டாம் என்றபடி.)

     அரசர்கள் பெரிய இராயசூயம்,  வாஜபேயம்,  அசுவமேதம் முதலிய
யாகங்களைச்  செய்தல்  வேண்டும்என்பார்.  ஆயினும்,  அறம்,  அருள்,
சத்தியம் என்ற  மூன்றிலும் நிலைத்து நின்று அரசாட்சிசெய்யின் அதுவே
யாகமாம்;  வேறு யாகம் செய்யவேண்டுவது  இல்லை என்றாராம்.  “செயிர்
இலாஉலகினில் சென்று நின்று வாழ்,  உயிர்எலாம் உறைவதோர் உடம்பும்
ஆயினான்” 177) என்று தயரதனைப் பற்றி முன்னர்க் கூறியவாறு,  மக்களை
உயிராகவும் மன்னனை உடலாகவும் கூறுவது கம்பரின்முடியரசில் குடியரசுக்
கொள்கையாம். சங்ககாலத்தில் “நெல்லும்  உயிரன்றே,  நீரும் உயிரன்றே,
மன்னன் உயிர்த்தே  மலர்தலை உலகம்,  அதனால்,  யான் உயிர் என்பது
அறிகை, வேன்மிகுதானைவேந்தற்குக் கடனே’ என்று மக்களை உடலாகவும்,
மன்னனை உயிராகவும் கருதிக் கூறும் கொள்கை நிலைபெற்றதைக்காணலாம்.
(புறநா. 186.) உயிர் இல்லாத வழி உடல் இயங்காமை போல மக்கள்
இல்லாதவழி மன்னனுக்குவேலை இல்லை என்பது கம்பர் கருத்து.
மக்களுக்காக மன்னவனே அன்றி  மன்னனுக்காக மக்கள் அல்லர்என்னும்
இக்கருத்தே சாலப் பொருத்தம்  உடையது அறம்,  அருள் சத்தியம்
இல்லாதவன் யாகம் செய்வதுவீண் ஆரவாமேயன்றி வேறன்று.         25