பக்கம் எண் :

72அயோத்தியா காண்டம்

1433.ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;
வேர்த்தனர்; தடித்தினர்; சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்;
தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம்.*

     (நகர மக்கள்) ஆர்த்தனர் - ஆரவாரித்தனர்;  களித்தனர் -
மகிழ்ந்தனர்; ஆடிப் பாடினர் -;  வேர்த்தனர் - உடல் வியர்க்கப்
பெற்றனர்;  தடித்தனர் -(மகிழ்ச்சியால்) உடல் பெருத்தனர்;  மெய் -
உடம்பில்;  மயிர் சிலிர்த்துப்போர்த்தனர் - மயிர்க்கூச்செறியப் பெற்று
மூடப் பெற்றனர்;  மன்னனை - தயரதனை; புகழ்ந்து - துதித்து; 
வாழ்த்தினர் -;  சொல்லினார்க்கு எலாம் - இந் நற்செய்தியைச்
சொன்னவர்களுக்கொல்லாம்; நீள்நிதி - பெருஞ்செல்வத்தை; தூர்த்தனர்-
நிரப்பினார்கள்.

     எல்லாம் என்பது இருதிணைப் பொது. மகிழ்ச்சி மிகுதியால்
புளகாங்கிதம் அடைதல் என்பதனையே‘மெய்ம்மயிர்ச் சிலிர்த்துப்
போர்த்தனர்’ என்றார்.                                          35

1434.திணி சுடர் இரவியைத் திருத்துமாறுபோல்,
பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை
மணியிடை வேகடம் வகுக்குமாறுபோல்,
அணி நகர் அணிந்தனர் - அருத்தி மாக்களே.

     அருத்தி மாக்கள் - அன்புடைய அயோத்தி நகர மக்கள்;  திணி
சுடர் இரவியைத்திருத்துமாறுபோல் -
நெருங்கிய கதிர்களையுடைய
சூரியனைச் சீர்திருத்தும் தன்மையைப்போலவும்;பணியிடைப் பள்ளியான்-
பாம்பின் இடையே படுத்துறங்கும்  திருமாலின்;  பரந்தமார்பிடை -
அகன்ற மார்பின் நடுவில் அமைந்த; மணியினை - கௌஸ்துப மணியினை;
வேகடம் வகுக்குமாறுபோல் - சாணை பிடித்து  மாசு போக்குதலைப்
போலவும்;  அணிநகர்அணிந்தனர் - முன்போ அழகுற உள்ள
அயோத்திநகரை  மேலும் அலங்கரித்தார்கள்.

     இயல்பாகவே அழகான அயோத்திநகரை மீண்டும் அழகு செய்தலை
இரண்டு உவமைகளால்விளக்கினார். ஒளியுடைய சூரியனை மேலும் திருத்து
தலையும்.  கௌஸ்துப மணியைப் பட்டை தீட்டி ஒளிஊட்டுதலையும் போல
என்பதால், அவை இரண்டும் போல அயோத்தியும் இயற்கையாகவே
அழகுடையது என்றாயிற்று, வேகடம் - சாணைபிடித்தல். அருத்தி - அன்பு.
‘ஏ’ ஈற்றசை.                                                  36

1435. வெள்ளிய, கரியன, செய்ய,
     வேறு உள,
கொள்ளை வான் கொடி நிரைக்
     குழாங்கள் தோன்றுவ -