பக்கம் எண் :

74அயோத்தியா காண்டம்

 மதி தொட நிவந்து உயர் மகர தோரணம்
புதியன அலர்ந்தன புதவ ராசியே.

     புதவ ராசி - கோபுர வாயிற் கதவுகளின் வரிசைத் தொகுதிகள்;
காலையில் கதிரவன்- காலைப்பொழுதில் உள்ள இளஞ்சூரியன்; முடுகி -
விரைந்து சென்று (நண்பகலில்); வேறுஒரு கவின் கொண்டான் -
வேறுபட்ட ஒர் அழகைக் கொண்டனன்;  என - என்றுசொல்லும்படி; மதி
தொட நிவந்து உயர் மகர தோரணம் -
சந்திரனைத் தொடும்படி உயர்ந்த
மகரமீன் வடிவமாகச் செய்யப்பெற்ற தோரணங்கள்; முதிர்ஒளி உயிர்த்தன-
மிக்கசோபையை வீசினவாய்; புதியன - புதியனவாய்; அலர்ந்தன -
விளங்கப்பெற்றன.

     கோபுர வாயிற் கதவுகளில் மகரதோரணங்கள் புதியனவாய்க் கட்டப்
பெற்றமையை வருணித்தார்.புதவம் - கதவு. புதா என்பது புதவு என ஆகி
புதவம் என அம் சாரியை பெற்றது. “குறியதன் கீழ் ஆக்குறுகலும்
அதனோடு உகரம் ஏற்றலும்”  (நன். 172........) என்பது இலக்கணவிதி செஞ்
சூரியனாகியஉதய சூரியன் நண்பகலில் வெள்ளொலி விரித்தல் வெளிப்படை.
‘ஏ’காரம் ஈற்றசை.                                              39

1438.துனி அறு செம்மணித் தூணம் நீல் நிறம்
வனிதை - ஓர் - கூறினன் வடிவு காட்டின;
புனை துகில் உறைதொறும் பொலிந்து தோன்றின.
பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே.

     புனை துகில் உறை தொறும் பொலிந்து  தோன்றின - அழகிய
(வெண்மையான ) துணி உறைகளுக்குள்ளே விளங்கித் தோன்றுவனவாகிய;
துனி அறு - குற்றம் அற்ற;  செம்மணித்தூணம் - சிவந்த மாணிக்கத்தால்
ஆகிய தூண்கள்;  நீல் நிற வனிதை - நீல நிறம்உடைய பார்வதியை;
ஓர் கூறினன் - தன்னுடைய இடப்பாகத்தில் உடையவன் ஆகிய
சிவபெருமானது; வடிவு - (திருநீறு பூசிய செம்மை) வடிவத்தை; காட்டின -
காண்பித்தன;பவளத் தூண்கள் - (வெள்ளுறையில் பொதிந்த) பவளத்தால்
ஆகிய தூண்கள்; பனி பொதிகதிர் என - பனியில் மறைந்த காலைச்
செஞ்சூரியன் என்னும்படி (பொலிந்து தோன்றின -விளங்கித் தோன்றின.)

     செம்மணித் தூண்களும் பவளத் தூண்களும் வெண்மையான துணி
உறையால் மூடப்பெற்றுள்ள காட்சியைச்சித்திரித்தார். திருநீறு
வெண்மையான உறைக்கும், உள்ளே பொதிந்த செம்மேனி செம்மணித்
தூணத்துக்கும்உவமையாம். அவ்வாறே பனி வெள்ளுறைக்கும், உட்பொதிந்த
சிவந்த சூரியன் பவளத்தூணுக்கும்உவமையாம். ‘புனைதுகில் உறைதொறும்
பொலிந்து தோன்றின’ என்ற மூன்றாம் அடியை முன்னும்  பின்னும்கூட்டிப்
பொருள் செய்க, இது இடை நிலைத் தீவக அணியோடு கலந்துவந்த
உவமையணியாம். துகில் -வெண்மையான ஆடை. ‘ஏ’ காரம் ஈற்றசை.   40