பக்கம் எண் :

92அயோத்தியா காண்டம்

(2214) வருவதும் காண்க. “அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்” என்று
(குறள். 720) வள்ளுவர்கூறும் உவமை இதற்கு ஒருபுடை ஒப்பு
நோக்கலாகும்.                                                 70

மந்தரை  மாற்றத்தால் சீற்றமுற்ற  கைகேயி கடிந்து உரைத்தல்

கலித்துறை

1469.வாய் கயப்புற மந்தரை வழங்கிய வெஞ் சொல்,
காய் கனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற,
கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள்
தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்;

     வாய் கயப்புற - வாய் கசக்கும்படி; மந்தரை - கூனி; வழங்கிய -
கூறிய; வெஞ்சொல் - கொடிய வார்த்தை; காய் - எரிகின்ற, கனல்தலை-
நெருப்பிடத்தில்;  நெய் சொரிந்தென - நெய் ஊற்றினாற் போல;  கதம் -
கோபத்தை;  கனற்ற - மேலும்  தூண்டி  எரியச்செய்ய;  (அதனால்) .
கேகயர்க்கு இறைதிருமகள் - கேகய நாட்டு அரசனது அழகுப்
பெண்ணான கைகேயி; கிளர் இளவரிகள் தோய் -எழுந்த இளங்கோடுகள்
பொருந்திய;  கயல் கண்கள் -  கயல் போன்ற கண்கள்;  சிவப்புற-
(சினத்தால்) செம்மை அடைய;  நோக்கினள் - பார்த்து;  சொல்லும் -
பேசத் தொடங்கினாள் (மேல் தொடரும்)

     நெய் விடவிட நெருப்பு எரிதல் போல மந்தரை பேசப் பேச
கைகேயிக்குச் சினம் மூண்டது. இராமனிடம்சினம் மிகுந்து கூறிய சொற்கள்
ஆதலின் சொன்ன அவளுக்கும் வாய் கசக்கும் என்றார். ‘கைக்குமே, தேவரே
தின்னினும் வேம்பு’  என்றது  (நாலடி. 95) போல,  இனி வருவன கைகேயி
மாற்றமாம்.                                                   71

1470.‘வெயில் முறைக் குலக் கதிரவன்
     முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும்,
     உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை,
     மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால்,
     என் சொனாய்? - தீயோய்!

     ‘தீயோய்! - கொடியவளே!; வெயில்முறை - ஒளிவரிசையை உடைய;
குலக்கதிரவன் - சிறந்த சூரியன்; முதலிய மேலோர் - முதலாகிய
உயர்ந்தோர்கள்; உயிர் முதல் பொருள் - உயிர் முதலாகிய பொருள்கள்;
திறம்பினும் - போவதாயினும்;உரை திறம்பாதோர் - சத்தியத்தினின்றும்
மாறுபடார்; (அத்தகைய) மயில்முறைக் குலத்துஉரிமையை - மயிலினது
முறைமையைக் கொண்ட அரசகுலத்து