சுக்கிரீவன்;இனி, வாலிதன் வலி -''இனி வாலியின் வலிமை;வீழ்ந்ததே- அழிந்ததேயாம்'';என விரும்பா- என்று விருப்பமுற்று;மொழிந்த வீரற்கு- (தன்னிடம்) பேசிய இராமனிடம்;யாம் எண்ணுவது உண்டு-'நாங்கள் ஆலோசிக்க வேண்டுவது ஒன்றுளது';என மொழிந்தான் -என்று சொன்னான். இராமன் சொல்லைக் கேட்டதும் சுக்கிரீவன் பெரிதும் மகிழ்ந்தான் என்பதால் 'பேருவகைக்கடல் பெருந்திரை இரைப்ப' என்றார். பேருவகைக்கடல் என்பது உருவகம். 'அக்கரை' என்றதால் துயரமாகிய கடலுக்கு என உருவமாகக் கொள்ளல் வேண்டும். இராமன் உரையால் வாலியை இறந்துபட்டவனாகவே சுக்கிரீவன் உணர்ந்ததால் 'விழுந்ததே வாலி தன் வலி' எனப்பேசினான். விழுந்ததே - தெளிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாய் வந்த கால வழுவமைதி. 'எண்ணித் துணிக கருமம்' என்பதால் சுக்கிரீவன் இராமனிடம் 'யாம் எண்ணுவது உண்டு' என்றான். 'யாம்' என்று அனுமனை உள்ளிட்ட அமைச்சர்களை உளப்படுத்திக் கூறியதாகும். விழுந்ததே - ஏகாரம்தேற்றம். 71 அமைச்சர்களோடு கூடிச் சுக்கிரீவன் சிந்திக்க, அனுமன் பேசுதல் 3857. | அனைய ஆண்டு உரைத்து, அனுமனே முதலிய அமைச்சர், நினைவும், கல்வியும், நீதியும், சூழ்ச்சியும் நிறைந்தார் எனையர், அன்னவரோடும் வேறு இருந்தனன், இரவி தனையன்; அவ் வழி, சமீரணன் மகன் உரைதருவான்: |
இரவி தனையன் -சூரியன் மகனாகிய சுக்கிரீவன்;அனைய ஆண்டு உரைத்து -அவ்வாறு அங்குச் சொல்லிவிட்டு;நினைவும் கல்வியும் - எண்ணமும் கல்வியும்;நீதியும் சூழ்ச்சியும்- நீதிநெறிகளும் ஆய்வுத்திறமும்; நிறைந்தார் - நிறைந்தவர்களாகிய;அனுமனே முதலிய அமைச்சர் - அனுமன் முதலான அமைச்சர்கள்;எனையர் -எத்துணைபேர் இருந்தனரோ; அன்னவரோடும் -அத்தனை பேருடனும்;வேறு இருந்தனன்- வேறிடத்தில் (ஆலோசனை செய்ய) இருந்தான்;அவ்வழி -அப்பொழுது; சமீரணன் மகன் -வாயு மைந்தனாகிய அனுமன்;உரைதருவான் - பேசலாயினான். வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனுக்கு உண்டோ, இல்லையோ எனச் சுக்கிரீவன் ஐயுற்று அதைப்பற்றி ஆலோசிக்க அனுமன் முதலிய அமைச்சர்களை அழைத்துக் கொண்டு தனியிடத்தே சென்றான். அமைச்சர்களுக்குச் செயல்படுவதற்கேற்ற எண்ணமும், அறிவுத்திறனும், நீதிநெறியும், அரசன் ஆக்கத்திற்குத் தக்க சூழ்ச்சியும் வேண்டுதலின் அந்நான்கினையும் உடைய அமைச்சர் என்றார். அனுமனே - ஏகாரம் தேற்றப்பொருளில் மற்றையோரினும் அவனுக்குள்ள |