பக்கம் எண் :

நட்புக் கோட் படலம்111

சிறப்பை உணர்த்துவதாகும்.  ''ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும்
என்னும், வேற்றுமை இவனோடு இல்லையாம்'' (3767) என்ற இராமன்
கூற்றாலும் 'அறிவும் ஈதே, உரு ஈதே, ஆற்றல் ஈதே. . . . நீதி ஈதே நினக்கு'
(5338) என்ற சீதா பிராட்டியின் சொற்களாலும் அனுமனின் நிறம் விளங்குதல்
காண்க.

     நினைவும் கல்வியும் நீதியும் சூழ்ச்சியும் - எண்ணும்மை.  சமீரணன் -
காற்று.  நன்றாகச் சஞ்சரிக்க வல்லவன் எனும் காரணம்பற்றி வந்த பெயர்.
சுக்கிரீவன் ஐயத்தைக் குறிப்பால் உணர்ந்த அனுமன் அவன் ஐயம் நீங்கச்
சொல்லத் தொடங்கினான் என்க.  தனயன் - எதுகை நோக்கித் தனையன்
எனத் திரிந்தது.                                               72

3858.'உன்னினேன், உன்தன் உள்ளத்தின்
     உள்ளதை, உரவோய்!
''அன்ன வாலியைக் காலனுக்கு
     அளிப்பது ஓர் ஆற்றல்
இன்ன வீரர்பால் இல்லை'' என்று
     அயிர்த்தனை; இனி, யான்
சொன்ன கேட்டு, அவை கடைப்பிடிப்பாய்'
     எனச் சொன்னான்.

     உரவோய் -வலிமை உடையவனே! உன்தன் உள்ளத்தின் - உன்
மனத்தில்;உள்ளதை -உள்ள கருத்தை;உன்னினேன் -(யான்) ஊகித்து
அறிந்து கொண்டேன்;அன்ன வாலியை -அத்தகைய வலிமை வாய்ந்த
வாலியை;காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் -யமனுக்குக்
கொடுக்கும்படியான ஒப்பற்ற வலிமை;இன்ன வீரர்பால் இல்லை -இந்த
வீரர்களிடத்தில் இல்லை;என்று அயிர்த்தனை -என்று ஐயம் கொண்டாய்;
இனி யான் சொன்ன கேட்டு
- இனி யான் சொல்லும் வார்த்தைகளைக்
கேட்டு;அவை கடைப்பிடிப்பாய் -அவற்றை உறுதியாகக் கொள்வாய்;
எனச் சொன்னான் -
என்று சொல்வானாயினன்.

     உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரவல்ல அனுமன் தன்
அறிவால் சுக்கிரீவன் மனத்தில் கொண்ட ஐயத்தை உணர்ந்துகொண்டான்.
காலனுக்கு அளிப்பது - கொல்வது என்னும் பொருளைத் தருவது.  அன்ன
வாலி என்றது.  எதிர்த்தார் வலிமையில் பாதியைத் தான் பெறுதற்குரிய வரம்
பெற்ற வாலி  என அவன் பெருமையைக் கூறியதாகும்.  இன்ன வீரர் - இங்கு
வந்துள்ள இராமலக்குவரைக் குறிக்கும்.

     யான் சொன்ன என்பதில் சொன்ன காலவழுவமைதி.             73

3859. 'சங்கு சக்கரக் குறி உள,
     தடக் கையில், தாளில்;
எங்கும் இத்தனை இலக்கணம்
     யாவர்க்கும் இல்லை;