பக்கம் எண் :

நட்புக் கோட் படலம்115

இராமனின் ஆற்றலைக் கண்டறிய அனுமன் உரைத்த உபாயம்

3863. 'பிறிதும், அன்னவன் பெரு
     வலி ஆற்றலை, பெரியோய்!
அறிதி என்னின், உண்டு உபாயமும்;
     அஃது அரு மரங்கள்
நெறியில் நின்றன ஏழில், ஒன்று
     உருவ, இந் நெடியோன்
பொறி கொள் வெஞ் சரம் போவது
     காண்!' எனப் புகன்றான்.

     பெரியோய் -சுக்கிரீவப் பெரியோனே! பிறிதும்-மற்றும்;அன்னவன்
பெருவலி ஆற்றலை -
அந்த இராமனுடைய பெரிய வலிமைச் சிறப்பை;
அறிதி என்னின் -
அறிய விரும்புவாயானால்;உபாயமும் உண்டு -அதற்கு
ஒரு வழி உள்ளது.;அஃது -அவ் உபாயமாவது;நெறியில் நின்றன -நாம்
போகும் வழியில் நிற்பனவான;அருமரங்கள் ஏழில் -எய்துதற்கரிய
மராமரங்கள் ஏழிற்;ஒன்று உருவ -ஒன்றைத் துளைக்கும்படி;
இந்நெடியோன் -
இந்த நெடியோனாகிய இராமனது;பொறி கொள்
வெஞ்சரம் -
நெருப்புப்பொறி கொண்ட கொடிய அம்பொன்று;போவது
காண் -
செல்வதே ஆகும்;எனப் புகன்றான் -என்று சொன்னான்.

     மராமரங்கள் ஏழில் ஏதேனும் ஒரு மரத்தை ஊடுருவும் ஆற்றல் இராமன்
அம்புக்கு உண்டாயின.  அவ்வம்பு வாலியின் மார்பைத் துளைக்கும் ஆற்றலை
உடையது என்பதைத் தெளியலாம் என்று சுக்கிரீவன் தெளியுமாறு சிறந்த
உபாயத்தை அனுமன் உரைத்தனன்.  வலியாற்றல் - ஒரு பொருட்பன்மொழி;
                                                             78

சுக்கிரீவன், இராமனை அணுகித் தன் கருத்தைக் கூறுதல்

3864. 'நன்று நன்று' எனா, நல்
     நெடுங் குன்றமும் நாணும்
தன் துணைத் தனி
     மாருதி தோளிணை தழுவி,
சென்று, செம்மலைக் குறுகி,
     'யான் செப்புவது உளதால்,
ஒன்று உனக்கு' என, இராமனும்,
     'உரைத்தி அஃது' என்றான்

     நன்று நன்று எனா -(அனுமன் கூறியதைக் கேட்ட சுக்கீரிவன்) 'நீ
சொன்னது நல்லது நல்லது' என்று மகிழ்ந்து;தன் தனித் துணை மாருதி -
தனது ஒப்பற்ற துணையாக விளங்கும் அனுமனின்;நல் நெடுங்குன்றமும்
நாணும் -
நல்ல பெரிய மலைகளும் நாணும்படியான;தோளினை தழுவி -
தோள்கள் இரண்டையும் தழுவிக்