இராமனின் ஆற்றலைக் கண்டறிய அனுமன் உரைத்த உபாயம் 3863. | 'பிறிதும், அன்னவன் பெரு வலி ஆற்றலை, பெரியோய்! அறிதி என்னின், உண்டு உபாயமும்; அஃது அரு மரங்கள் நெறியில் நின்றன ஏழில், ஒன்று உருவ, இந் நெடியோன் பொறி கொள் வெஞ் சரம் போவது காண்!' எனப் புகன்றான். |
பெரியோய் -சுக்கிரீவப் பெரியோனே! பிறிதும்-மற்றும்;அன்னவன் பெருவலி ஆற்றலை -அந்த இராமனுடைய பெரிய வலிமைச் சிறப்பை; அறிதி என்னின் -அறிய விரும்புவாயானால்;உபாயமும் உண்டு -அதற்கு ஒரு வழி உள்ளது.;அஃது -அவ் உபாயமாவது;நெறியில் நின்றன -நாம் போகும் வழியில் நிற்பனவான;அருமரங்கள் ஏழில் -எய்துதற்கரிய மராமரங்கள் ஏழிற்;ஒன்று உருவ -ஒன்றைத் துளைக்கும்படி; இந்நெடியோன் -இந்த நெடியோனாகிய இராமனது;பொறி கொள் வெஞ்சரம் -நெருப்புப்பொறி கொண்ட கொடிய அம்பொன்று;போவது காண் -செல்வதே ஆகும்;எனப் புகன்றான் -என்று சொன்னான். மராமரங்கள் ஏழில் ஏதேனும் ஒரு மரத்தை ஊடுருவும் ஆற்றல் இராமன் அம்புக்கு உண்டாயின. அவ்வம்பு வாலியின் மார்பைத் துளைக்கும் ஆற்றலை உடையது என்பதைத் தெளியலாம் என்று சுக்கிரீவன் தெளியுமாறு சிறந்த உபாயத்தை அனுமன் உரைத்தனன். வலியாற்றல் - ஒரு பொருட்பன்மொழி; 78 சுக்கிரீவன், இராமனை அணுகித் தன் கருத்தைக் கூறுதல் 3864. | 'நன்று நன்று' எனா, நல் நெடுங் குன்றமும் நாணும் தன் துணைத் தனி மாருதி தோளிணை தழுவி, சென்று, செம்மலைக் குறுகி, 'யான் செப்புவது உளதால், ஒன்று உனக்கு' என, இராமனும், 'உரைத்தி அஃது' என்றான் |
நன்று நன்று எனா -(அனுமன் கூறியதைக் கேட்ட சுக்கீரிவன்) 'நீ சொன்னது நல்லது நல்லது' என்று மகிழ்ந்து;தன் தனித் துணை மாருதி - தனது ஒப்பற்ற துணையாக விளங்கும் அனுமனின்;நல் நெடுங்குன்றமும் நாணும் -நல்ல பெரிய மலைகளும் நாணும்படியான;தோளினை தழுவி - தோள்கள் இரண்டையும் தழுவிக் |