பக்கம் எண் :

வாலி வதைப் படலம் 181

3953.வீசின காற்றின் வேர் பறிந்து, வெற்புஇனம்
ஆசையை உற்றன; அண்டப் பித்திகை
பூசின, வெண் மயிர் பொடித்த வெம் பொறி;
கூசினன் அந்தகன்; குலைந்தது உம்பரே.

     வீசின காற்றின் -(வாலி எழுந்த வேகத்தால்) வீசின காற்றினால்;
வெற்பு இனம் -
மலைக் கூட்டங்கள்;வேர் பறிந்து -நிலை
பெயர்ந்தவனாய்;ஆசையை உற்றன - திசையின் எல்லையை அடைந்து
வீழ்ந்தன;வெண்மயிர் பொடித்த வெம்பொறி -(மேனியில் அடர்ந்துள்ள)
வெண்மை வாய்ந்த மயிர்க்கால் தொறும் தோன்றிய வெம்மையுடைய
அனற்பொறிகள்;அண்டப் பித்திகை பூசின-அண்டப்பரப்பின் மதிற் சுவரை
மறைத்தன;அந்தகன் கூசினன் -(இவ்வாறு சினத்துடன் வரும்
வாலியைக்காண) யமனும் கண் கூசினான்;உம்பர் குலைந்தது -தேவர்களும்
நிலை குலைந்தனர்.

     இப்பாடல் வாலியின் வேகத்தையும் சினமிகுதியையும் விளக்கும். வெண்
மயிர் பொடித்த வெம்பொறி - மயிர்க்கால்களில் இருந்து எழுந்த தீப்பொறிகள்.
'அண்டப் பித்திகை பூசின' என்றதால் அண்டச்சுவர்கள் வரை இவன் சினத்தீப்
பொறிகள் சென்று ஒளி வீசின என்பதாம். உம்பர் - மேல் உலகம்; இடவாகு
பெயராய்த் தேவர்களைக் குறிக்கும். அந்தகன். உயிர்கட்கு அந்தத்தைச்
செய்வோனாகிய இயமன்.                                         19

3954.கடித்த வாய் எயிறு உகு
      கனல்கள் கார் விசும்பு
இடித்த வாய் உகும்
      உரும் இனத்தின் சிந்தின;
தடித்து வீழ்வன எனத்
      தகர்ந்து சிந்தின,
வடித்த தோள் வலயத்தின்
      வயங்கு காசு அரோ.

     கடித்த வாய் எயிறு உரு -(வாலி வெகுண்டு) கடித்த வாயிலிலுள்ள
பற்களினின்று வெளிப்பட்ட;கனல்கள் -தீப்பொறிகள்;கார்விசும்பு
இடித்தவாய்
- கரிய மேகங்கள் விசும்பிடத்து ஒன்றோடொன்று மோதிய
நிலையில்;உகும் உரும் இனத்தின் -விழும் இடிகளின் கூட்டம் போல;
சிந்தின -
எங்கும் சிதறின.வடித்த தோள் வலயத்தின் -(அவன்
தோள்தட்டி ஆர்த்த நிலையில்) சிறந்த அவன் தோள் வளைகளில்;வயங்கு
காசு -
விளங்குகின்ற இரத்தினங்கள்;தடித்து வீழ்வன என - மின்னல்கள்
கீழே விழுந்தாற்போல; தகர்ந்து சிந்தின -சிதறி வீழ்ந்தன.

     எயிறு தோன்றப் பற்களைக் கடித்தல் - வெகுளியில் தோன்றும்
மெய்ப்பாடு.  காசு - இரத்தினம். 'தப்பின மணி, காசும், சங்கமும் மயிலன்னார்'
(1189)