பக்கம் எண் :

186கிட்கிந்தா காண்டம்

அடைந்ததைப் பார்த்து;யான் -நான்;அது தயிர் எனக் கடைந்து -
அதனைத் தயிர் கடைவது போல் கடைந்து;அவர்க்கு அமுதம் தந்தது -
அவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்த செயல்;மறக்கல் ஆவதோ -
மறக்கக்கூடியது ஆகுமோ? (ஆகாது).

     மயில் இயல், குயில்மொழி - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை.  அண்மைவிளி, மறக்கல் ஆவதோ? - வாலி கடல்
கடைந்து அமுதளித்த பெருஞ்செயலைத் தாரை அறிந்ததே; எனவே, 'நீ
மறக்கக்கூடியதா' எனத் தாரைக்கு உரைத்தனன்.  இச்செயலை உலகத்தார்
மறக்கக்கூடியதா? என்று உலகினர் மறக்கமுடியாத அருஞ்செயலைச்
செய்வதன் வாலி என்பதை நிறுவினன் எனவும் கொள்ளலாம் - ஆவதோ -
ஓகாரம் எதிர்மறை.                                    27

3962. 'ஆற்றல் இல் அமரரும்,
      அவுணர் யாவரும்,
தோற்றனர்; எனையவர்
      சொல்லற்பாலரோ?
கூற்றும், என் பெயர் சொலக்
      குலையும்; ஆர், இனி
மாற்றவர்க்கு ஆகி வந்து,
      எதிரும் மாண்பினார்?

     ஆற்றல் இல் அமரரும் -வலிமையில்லாத தேவர்களும்;அவுணர்
யாவரும் -
அசுரர்கள் எல்லோரும்;தோற்றனர் -தோற்றுப் போனவர்கள்;
எனையவர் -
எத்தனை பேராவர்;சொல்லற்பாலரோ? -(என்று) சொல்லும்
தன்மையர் ஆவரோ?கூற்றும் -யமனும்;என் பெயர் சொல -என்
பெயரைப் பிறர் சொல்லக் கேட்டால்;குலையும் -நடுங்குவான்.
மாற்றவர்க்கு ஆகிவந்து -(அதனால்) எனது பகைவனான சுக்கிரீவனுக்குத்
துணையாகி வந்து;எதிரும் மாண்பினார் -என்னைப் போரில் எதிர்க்கும்
திறமையுடையவர்;இனி ஆர் -இனியார் உள்ளனர்? (ஒருவரும் இலர்).

     வாலி தன் வீரமிகுதியைத் தாரைக்கு உரைத்தனன்.  தேவர்களையும்,
அசுரர்களையும், யமனையும் அஞ்சுமாறு செய்யும் அவனை எதிர்க்கக்கூடியவர்
எவரும் இரார் என்பதால் 'எதிரும் மாண்பினார் ஆர்?' எனத் துணிந்து
பேசினான்.  கூற்றும் - உயர்வு சிறப்புஉம்மை.                       28

3963.'பேதையர் எதிர்குவர் எனினும், பெற்றுடை
ஊதிய வரங்களும், உரமும், உள்ளதில்
பாதியும், என்னதால்; பகைப்பது எங்ஙனம்?
நீ, துயர் ஒழிக!' என, நின்று கூறினான்.

     பேதையர் -(எனது வலிமையை உணராத) அறிவில்லாதவர்;எதிர்குவர்
எனினும் -
என்னை எதிர்த்துப் போர் புரிவார்கள் என்றாலும்;பெற்றுடை -
அவர்கள் அடைந்துள்ள;ஊதிய வரங்களும் -