உடைய இலக்குவனே! மெய்ம்மை உற்றார் சிலர் -(இவ்வுலகில்) தவறாத நல்லொழுப்பம் பொருந்தியவர் ஒரு சிலரே ஆவர்;அல்லவரே பலர் -அந் நல்லொழுக்கம் கடைப் பிடிக்காதவரே பலர்;என்பது உண்மை - என்பதுதான் உண்மையாகும். பெற்றார் உழை -நம்மை நண்பராகப் பெற்றவரிடத்தில்;பெற்ற பயன் -பெறுதற்கேற்ற அளவில் காணப்படும் நல்ல பலனை;பெறும் பெற்றி அல்லால் -பெற்றுக் கொள்ளும் தன்மையல்லாமல்; நவை அற்றார் என்றலுக்கு -குற்றமற்றவர் என்று சொல்வதற்கு;ஆகுநர் ஆர்கொல் -உரியவர் யாருளர்?' என்றான் -என்று (இராமன்) கூறினான். உலகில் நல்லொழுக்கம் உடையார் சிலராகவும், அவ்வொழுக்கம் இல்லாதார் பலராகவும் இருப்பதால் நாம் நண்பர்களிடத்து உள்ள குறைகளை நோக்காது குணங்களை ஏற்றுக்கொண்டு பயன் அடைய வேண்டும் என்பது இராமனின் அறிவுரையாகும். 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற பழமொழியினையும் 'நல்லார் எனத்தான் நனிவிரும்பிக் கொண்டாரை, அல்லால் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும், நெல்லுக்கு உமி உண்டு, நீர்க்கு நுரையுண்டு, புல்லிதழ் பூவிற்கு முண்டு' (நாலடி - 221) 'குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்' (குறள் - 504); என்பனவற்றையும் காண்க. வில்தாங்கு - வெற்பு - இல்பொருள் உவமை; ஆகுநல்; 'ந' - பெயரிடை நிலை. முன் இரண்டடிகளில் வேற்றுப் பொருள் வைப்பணி. பின் இரண்டடிகளில், பொதுவாகக் கூறிய கருத்து, சுக்கிரீவன் குற்றம் உடையவனாயினும் அவன் மாட்டுள்ள நற்குணத்தால் பெறக் கூடிய பயனைப் பெறுவதே செய்ய வேண்டுவது என்ற சிறப்புப் பொருளைத் தெரிவிப்பதால் பிறிதுமொழிதல் அணியாம். 44 வாலி - சுக்கிரீவன் போர் | 3979. | வீரத் திறலோர், இவை இன்ன விளம்பும் வேலை, தேரில் திரிவான் மகன், இந்திரன் செம்மல், என்று இப் பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார், மூரித் திசை யானை இரண்டு என, முட்டினாரே. |
வீரத் திறலோர் -வீரமும் போர்த்திறமும் வாய்ந்த இராலக்குவர்; இன்ன இவை விளம்பும் வேலை -இத்தன்மையனவான சொற்களைப் பேசிக்கொண்டிருக்கையில்;தேரில் திரிவான் மகன் -தேர் மீதேறி வானம் எங்கும் சுற்றித் திரிபவனான சூரியன் மகனான சுக்கிரீவன்;இந்திரன் செம்மல்-இந்திரன் மகனான வாலி; என்று - எனக் கூறப்பெற்று;இப் பாரில் திரியும்-இந்த உலகில் சுற்றித் திரியும்;பனிமால் வரை அன்ன - குளிர்ந்த பெரியமலை போன்ற;பண்பார் -தன்மையினராய (சகோதரர்கள்); மூரித்திசையானை இரண்டு என - |