பக்கம் எண் :

204கிட்கிந்தா காண்டம்

     போரிடுகையில் ஆரவாரித்தலும், ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்
கொள்ளுதலும் வீரர் இயல்பாகும்.  ஆர்ப்பு, குத்து இவற்றால் எழுந்த
ஓசைகளின் கடுமை இப்பாடலில் விளக்கப்பெற்றது.  அவர்களின் ஆர்ப்பொலி
ஏழுகடல்களும் ஒன்று சேர்ந்து பத்துத்திசைகளில், பரவுகையில் ஏற்படும்
ஓசையினும் பல மடங்கு அதிகமாயிற்று என்பது முதல் இரண்டடிகளின்
பொருள்.  ஐம்மடங்கு என்பது மிகுதியைக் குறித்து நின்றது.  திசைகள்
பத்தாவன - எட்டுத் திசைகளுடன் மேலும், கீழும் ஆகிய இரு திசையும்
சேர்ந்தவை.  ஆர்கலிக்கு - ஆர்கலியினும்.  உருபுமயக்கம்.          52

3987. வெவ் வாய எயிற்றால் மிடல்
      வீரர் கடிப்ப, மீச் சென்று,
அவ் வாய் எழு சோரிஅது,
      ஆசைகள்தோறும் வீச,
எவ் வாயும் எழுந்த கொழுஞ்
      சுடர் மீன்கள் யாவும்,
செவ்வாயை நிகர்த்தன; செக்கரை
      ஒத்த, மேகம்.

     மிடல் வீரர் -வலிமையையுடைய வாலி சுக்கிரீவர்;மீச் சென்று -
ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து;வாய் வெம் எயிற்றால் கடிப்ப -தம்
வாயிலுள்ள கொடிய பற்களால் ஒருவரையொருவர் கடித்ததால்;அவ்வாய்
எழு சோரி அது -
கடித்த அவ்விடங்களிலிருந்து பெருகிய இரத்தமானது;
ஆசைகள் தோறும் வீச -
எல்லாத் திசைகளிலும் தெறித்ததால்;எவ்வாயும்
எழுந்த -
வானத்தில் எல்லாவிடங்களிலும் தோன்றிய;கொழுஞ்சுடர்
மீன்கள்யாவும் -
மிக்க ஒளியையுடைய விண்மீன்கள் எல்லாம்;செவ்வாயை
நிகர்த்தன -
(தம்மீது குருதி பட்டதால் தம் இயல்பான நிறம் மாறி) செவ்வாய்
என்னும் கோளினை ஒத்து விளங்கின;மேகம் செக்கரை ஒத்த -மேகங்கள்
செவ்வானத்தை ஒத்து விளங்கின.

     கடித்த இடங்களிலிருந்து பெருகிய குருதியின் மிகுதி கூறப்பெற்றது.
செவ்வாய் - நவக்கிரங்களில் ஒன்று.  சிவந்த நிறமுடையது.  சோரி அது
என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி.  செக்கர் - செவ்வானம்.  இது செக்கல்
என்ற சொல்லின் ஈற்றுப் போலி; பின் பண்பாகு பெயராய்ச் செவ்வானத்தைக்
குறித்தது.                                                      53

3988.வெந்த வல் இரும்பிடை
      நெடுங் கூடங்கள் வீழ்ப்ப,
சிந்தி எங்கணும சிதறுவபோல்,
     பொறி தெறிப்ப,
இந்திரன் மகன் புயங்களும்,
      இரவி சேய் உரனும்,