| | சந்த வல் நெடுந் தடக் கைகள் தாக்கலின், தகர்வ. |
வெந்த வல் இரும்பிடை -(உலைக்களத்தில்) பழுக்கக் காய்ந்த வலிய இரும்பின் மீது;நெடுங்கூடங்கள் வீழ்ப்ப -பெரிய சம்மட்டிகளால் அடிக்க; சிந்தி எங்கணும் சிதறுவபோல - (அதனின்றும் தீப்பொறிகள்) சிந்தி எல்லாவிடத்தும் சிதறுவன போல;பொறி தெறிப்ப -தீப்பொறி பறக்க; இந்திரன் மகன் புயங்களும் -இந்திரன் மகனாகிய வாலியின் தோள்களும்; இரவி சேய் உரனும் -சூரியன் மைந்தனாகிய சுக்கிரீவன் மார்பும்;சந்த வல் நெடுந்தடக்கைகள் -அழகிய வலிய நீண்ட பெரிய கைகள்;தாக்கலின் தகர்வ -அறைவதனால் சிதைவுறுவன ஆயின. கூடம் - சம்மட்டி. கொல்லர் இருவர் எதிர் எதிராக நின்று ஒவ்வொரு வரும் ஒரு சம்மட்டி கொண்டு மாறி, மாறி அடிப்பாராதலின் 'கூடங்கள்' எனப்பன்மையால் கூறப்பட்டுள்ளது. வாலியின் தோள்களுக்கும் சுக்கிரீவனது மார்புக்கும் இரும்பும், அவர்களது கைகளுக்கு இரும்பை அடிக்கும் சம்மட்டியும் உவமை. சுக்கிரீவனும் வாலியும் ஒருவர்க்கொருவர் கைக்கொண்டு தாக்க அவர்களது தோள்களினின்றும், மார்பினின்றும் நெருப்புப் பொறிகள் தெறித்தனஎன்பதாம். 54. | 3989. | உரத்தினால் மடுத்த உந்துவர்; பாதம் இட்டு உதைப்பர்; கரத்தினால் விசைத்து எற்றுவர்; கடிப்பர்; நின்று இடிப்பர்; மரத்தினால் அடித்து உரப்புவர்; பொருப்புஇனம் வாங்கிச் சிரத்தின்மேல் எறிந்து ஒறுக்குவர்; தெழிப்பர்; தீ விழிப்பர். |
உரத்தினால் மடுத்து உந்துவர் -(அவ்விருவரும் ஒருவரையொருவர்) தத்தம் மார்பினால் தாக்கித் தள்ளுவார்கள்; பாதம் இட்டு உதைப்பர் - கால்களால் உதைப்பார்கள்;கரத்தினால் விசைத்த எற்றுவர் -கைகளால் வேகமாய்த் தாக்குவார்கள்;கடிப்பர் -வாயினால் கடிப்பார்கள்;நின்று இடிப்பர் -ஒருவர்க்கொருவர் எதிர்நின்று இடிப்பார்கள்;மரத்தினால்அடித்து உரப்புவர் -மரங்களைக்கொண்டு அடித்துக் கொண்டு அதட்டுவார்கள்; பொருப்பு இனம் வாங்கி -மலைக்கூட் டங்களைப் பெயர்த்து;சிரத்தின் மேல் எறிந்து -தலை மேல் வீசி;ஒறுக்குவர் -தண்டிப்பர்;தெழிப்பர் - ஆரவாரிப்பார்கள்;தீ விழிப்பர் - (சினத்தால்) நெருப்புப் போல விழித்து நோக்குவர். உந்துதல், உதைத்தல், எற்றுதல், கடித்தல், இடித்தல், மரம் கொண்டு அடித்தல், உரப்புதல், ஒறுக்குதல், தெழித்தல் என வாலியும் சுக்கிரீவனும் போரிடும் வகைகள் கூறப்பட்டன. 55 |