போரில் ஒருவரை மற்றொருவர் தேய்த்து வருத்துதலால்;செங்கனல் வெண்மயிர்ச்செல்ல - (உண்டான) சிவந்த கோபத்தீ வெண்மையான மயிர்க்கால் தொறும் வெறிப்பட;முரிபுல் கானிடை -உலர்ந்த புல் நிரம்பிய காட்டிடத்தே;எரி பரந்தன என -தீப்பற்றி எரிந்தது போல் தோன்ற; முனைவார் -(இருவரும்) போர் புரிவாராயினர்;விண்ணவர் வெருவிச் சாய்ந்தனர் -(அப்போரின் கடுமையைக் கண்டு) தேவர்கள் அஞ்சி நிலைகுலைந்தனர்;என்னை வேறு விளம்பல் -(போரின் கடுமை குறித்து) கூறத்தக்கது வேறு யாது உளது? செங்கனல் - செம்மை வெகுளியைக் குறிப்பதால் கோபத்தீ எனக் கொள்ளப்பட்டது. கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள என்பது தொல்காப்பியம் (தொல். சொல். உரி. 74). முரிபுல்கானிடை எரி பரந்தன எனச் செங்கனல் வெண்மயிர்ச் செல்ல என்றது உவமை அணி. வானரர்களுக்கு உடம்பில் வெண்மயிர் அடர்ந்திருத்தலால் காய்ந்த புல் உவமையாயிற்று. அடர்த்தியையும் மிகுதியையும் குறிக்கக் 'கான்' என்றார். செங்கனல் வெண்மயிர்ச் செல்ல - முரண்தொடை. 59 | 3994. | அன்ன தன்மையர், ஆற்றலின் அமர் புரி பொழுதின், வல் நெடுந் தடந் திரள் புயத்து அடு திறல் வாலி, சொன்ன தம்பியை, தும்பியை அரி தொலைத்தென்ன, தொல் நகங்களின், கரங்களின், குலைந்து, உக மலைந்தான். |
அன்ன தன்மையர் -அத்தகைய தன்மையையுடையவர்களான வாலி சுக்கிரீவர்;ஆற்றலின் அமர்புரி பொழுதில் -வலிமையோடு போர் செய்து கொண்டிருக்கையில்;வல்நெடுந் தடந்திரள் புயத்து -வலிய, நீண்ட, பெரிய திரண்ட தோள்களையும்;அடு திறல் வாலி -பகைவரை வெல்லும் வலிமையினையும் உடைய வாலி;சொன்ன தம்பியை -மேலே குறிப்பிட்ட தம்பியான சுக்கிரீவனை;தும்பியை அரி தொலைத்தென்ன -யானையைச் சிங்கம் அழிப்பது போன்று;கொல் நகங்களின் -கொல்லவல்ல நகங்களாலும்;கரங்களின் -கைகளாலும்;குலைந்து உக மலைந்தான் - வலிமை தளர்ந்து விழும்படி செய்தான். தும்பி - யானை - வாலிக்குச் சிங்கமும் சுக்கிரீவனுக்கு யானையும் உவமைகள். இதனால் வாலியின் ஆற்றல் மிகுதி கூறப்பெற்றது. அரி என்பது சங்கரிக்கும் அதாவது அழிக்கும் வலிமையுடையது என்னும் பொருளில் சிங்கத்தைக் குறித்தது. தொலைத்தென்ன - இது தொகுத்தல் விகாரம். நகங்களின், கரங்களின் என்புழி இன் ஏதுப் பொருளல்வந்தது. 60 |