அங்கதனுக்கு இராமன் அறிவுரை 4140. | வாலி காதலனும், ஆண்டு, மலர் அடி வணங்கினானை, நீல மா மேகம் அன்ன நெடியவன், அருளின் நோக்கி, 'சீலம் நீ உடையை ஆதல், இவன் சிறு தாதை என்னா, மூலமே தந்த நுந்தை ஆம் என, முறையின் நிற்றி.' |
ஆண்டு மலரடி வணங்கினானை -அப்பொழுது தன் மலர் போன்ற திருவடிகளில் வணங்கியவனான;வாலி காதலனும் -வாலியின் மகனான அங்கதனையும்;நீலமாமேகம் அன்ன நெடியவன் -நீல நிறம் வாய்ந்த சிறந்த மேகத்தையொத்த பெரியவனான இராமன்;அருளின் நோக்கி - கருணையோடு பார்த்து;நீ சீலம் உடையை ஆதல் -'நீ ஒழுக்கம் உடையவன் ஆகுக;இவன் சிறு தாதை என்னா -இந்தச் சுக்கிரீவனை உன் சிறிய தந்தை என்று கருதாமல்;மூலமே தநத் நுந்தை ஆம் என -உன் பிறப்பிற்குக் காரணமாகிய உன் தந்தையாகவே கொண்டு;முறையின் நிற்றி - அவன் கட்டளைப்படி நிற்பாயாக! இப்பாடல் அடுத்த பாடலில் உள்ள 'என்றான்' என்பதனோடு இயையும். வணங்கினான் (ஆகிய) வாலி காதலனையும் என உருபு பிரித்துக் கூட்டுக. நீல மேகம் இராமனுக்கு உவமை. நெடியவன் = பெருமைக்குரியவன்; மாவலின் பொருட்டு நீண்டனுமாம். ஆதல் என்பதற்கு ஆதலால் என்றும் பொருள் கொள்ளலாம். 26 4141. | என்ன, மற்று இனைய கூறி, 'ஏகு அவன் - தொடர' என்றான்; பொன் அடி வணங்கி, மற்று அப் புகழுடைக் குரிசில் போனான்; பின்னர், மாருதியை நோக்கி, 'பேர் எழில் வீர! நீயும், அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி, அறிவின்' என்றான். |
என்ன மற்று -என்று மேலும்;இனைய கூறி -இத்தகைய வார்த்தைகளைக் கூறி;அவன் - தொடர ஏகு என்றான் -'அந்தச் சுக்கிரீவனைத் தொடர்ந்து செல்வாயாக' என்று கூறினான்;மற்று -அதன் பின்;அப்புகழுடைக் குரிசில் -புகழ் பொருந்திய சிறந்த அங்கதன்;பொன் அடி வணங்கி -(இராமனுடைய) பொன் போன்ற பாதங்களில் வணங்கி; போனான் -கிட்கிந்தை நகருக்குச் சென்றான்;பின்னர் |