அனுமனைக் கிட்கிந்தைக்குச் செல்லுமாறு இராமன் வற்புறுத்தல் 4143. | 'நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற வரம்பு இலாததனை, மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால், அரும்புவ, நலனும் தீங்கும்; ஆகலின், ஐய! நின்போல் பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா. |
நிரம்பினான் ஒருவன் -அரசர்க்குரிய பண்புகள் நிறைந்த ஒப்பற்ற மன்னன் ஒருவன்;காத்த -பாதுகாத்த;இறுதி நின்ற வரம்பு இலாதது - கடை எல்லை இல்லாததும்;நிறை அரசு அதனை - எல்லாச் செல்வ வளங்களும் நிறைந்ததுமான அரசாட்சியை;மற்று ஓர் தலைமகன் -வேறு ஓர் அரசன்;வலிதின் கொண்டால் -வலியக் கைப்பற்றிக் கொண்டால்; நலனும் தீங்கும் அரும்புவ -(அந்த அரசியலில்) நன்மைகளேயன்றித் தீமைகளும் தோன்றுவனவாம்;ஆகலின் -ஆதலால்;ஐய -ஐயனே; நின்போல் பெரும்பொறை அறிவினோரால் -(அத்தகைய ஆட்சி) உன்னைப் போன்ற பொறுமையும் அறிவும் நிறைந்தவர்களாலேயே; நிலையினைப் பெறுவது -நிலை பெறக் கடவதாகும். நிரம்பினான்: அரசர்க்கு இன்றியமையாதனவாகக் கூறப்படும் அஞ்சாமை, ஈகை, அறிவு; ஊக்கம், கல்வி, வீரம் முதலிய நற்பண்புகள் நிரம்பப்பெற்றவன். நிறை அரசு - பல்வேறு வளங்களுடன், பல சிறப்புகளுடன் கூடிய அரசு. வள்ளுவர் குறிப்பிடும் 'இறைமாட்சி, நாடு' அதிகாரக் கருத்துக்களை இங்கே கொள்ளலாம். 'நிரம்பினான்' - ஈண்டு வாலியைக் குறித்தது; 'மற்றோர் தலைமகன்' சுக்கிரீவனைக் குறித்தது. இறுதி நின்ற வரம்பு - அழிவு, முன் பாடலில் அனுமனின் பொய்யில் உள்ளத்தையும், அன்பையும் கூறியவன் இப்பாடலில் அவனது பொறுமையினையும், அறிவையும் உரைத்து அரசியலுக்கு அவனது இன்றியாமையினை உணர்த்தினான், ''வெஞ்சின் அரக்கர் ஐவர் புலன்கள் ஒத்தார்; அவனும் நல் அறிவை ஒத்தான்'' (5664) எனப்பின்னரும் அனுமன் புகழப்படுவதைக் காணலாம. 29 4144. | 'ஆன்றவர்க்கு உரியது ஆய அரசினை நிறுவி, அப்பால், ஏன்று எனக்கு உரியது ஆய கருமமும் இயற்றற்கு ஒத்த சான்றவர், நின்னின் இல்லை; ஆதலால், தருமம்தானே போன்ற நீ, யானே வேண்ட, அத் தலை போதி' என்றான். |
|