கொள்க. 'வேனிலான் புகழைத் தீட்டும் தாரகை எழுந்தொளி சிறந்திட, அணிவான் கூட்டு மையெனச் சிறந்தது கூரிருட்பிழம்பே' (நைடத: மாலை: 11); என்ற அடிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. நெயின் - தொகுத்தல் விகாரம், மழைத்த - மழை என்னும் பகுதி அடியாகப் பிறந்த பெயரெச்சம். அகலில் எண்ணெய் ஊற்றி, தீயிட்டு எரித்து, அதனால் கரித்திரளைக் கலயத்தின் அடிப்பாகத்தில் படியச் செய்து மை கூட்டும் வழக்கம் இப்பாடலில் குறிக்கப்பட்டது. 2 4150. | நண்ணுதல் அருங் கடல் நஞ்சம் நுங்கிய கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என விண்ணகம் இருண்டது; வெயிலின் வெங் கதிர் தண்ணிய மெலிந்தன; தழைத்த, மேகமே. |
நண்ணுதல் அருங்கடல் -நெருங்குதற்கு அரிய கடலில் தோன்றிய; நஞ்சம் நுங்கிய -நஞ்சை விழுங்கிய;கண்ணுதல் கண்டத்தின் - நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் கழுத்தின்;காட்சி ஆம் என -கரிய நிறக் காட்சி என்னுமாறு;விண்ணகம் இருண்டது -வானம் இருண்டது. வெயிலின் வெங்கதிர் -சூரியனுடைய வெம்மையான கதிர்கள்;தண்ணிய மெலிந்தன -குளிர்ந்தனவாய்த் தம் வலிமை குறைந்தன;மேகம் தழைத்த - கரிய மேகங்கள் நீர் மொண்டு பெருகிப் பரவின. பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சின் கொடுமை தோன்ற 'நண்ணுதல் அருங்கடல் நஞ்சம்' என்றார். கண்ணுதல் - இலக்கணப்போலி, நெற்றிக் கண்ணை உடைய சிவபிரானைக் குறித்தலின் அன்மொழித் தொகையுமாம். அமுதம் வேண்டி அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைய, முதலில் வந்த நஞ்சைச் சிவபிரான் உண்டார் என்பது புராணக் கதையாகும். நஞ்சு கரிய நிறமுடையதாதலின் அதனை உண்ட சிவபிரான் கண்டமும் கரிய நிறமுடையதாயிற்று. 'நீலமணி மிடற்றன்' (புறம் - 91) என்பர் ஒளவையார். மெலிந்தன, தழைத்த - முரண் தொடை. சிவபிரான் கண்டத்தின் கருநிறம் போல் வானம் இருண்டது என்றது காட்சிஅணி. 3 4151. | நஞ்சினின், நளிர் நெடுங் கடலின், நங்கையர் அஞ்சன நயனத்தின், அவிழ்ந்த கூந்தலின், வஞ்சனை அரக்கர்தம் வடிவின், செய்கையின், நெஞ்சினின், இருண்டது - நீல வானமே. |
நீல வானம் -நீல நிறம் வாய்ந்த வானமானது;நஞ்சினின் -விடம் போலவும்;நளிர் நெடுங் கடலின் -குளிர்ந்த பெரிய கடல் |