திசைகள் கருமானாகவும், கரிய மேகம் கரிக்குவியலாகவும், கூர் துருத்தியாகவும், தீக்கொழுந்துள்ள மின்னலாகவும் உருவகிக்கப்பட்டன. பல பொருள்களைத் தம்முள் இயல்புடையவனாக உருவகித்திருப்பதால் இப்பாடலில் இயைபு உருவக அணி அமைந்துள்ள. செய்யும் முழுவதிலும் உருவகம் காணப்படுவதால் முற்று உருவக அணி எனினும் அமையும். இரும்புத் தொழில் செய்யும் கொல்லரைக் கருமகன் என்பர். கரும்பொன் என்ற இரும்பில் பணி செய்வோன் ஆதலின் 'கருமகன்' எனப்பட்டான் போலும். கருமை வலிமையுமாம்; இருந்தை - கரி; 'இருந்தையின் எழு தீ ஒத்து' (2006) என்றது காண்க. 8 4156. | சூடின மணி முடித் துகள் இல் விஞ்சையர் கூடு உறை நீக்கிய குருதி வாட்களும், ஆடவர் பெயர்தொறும் ஆசை யானையின் ஓடைகள் ஒளி பிறழ்வனவும், ஒத்ததே. |
சூடின மணிமுடி -(மின்னல்கள்) அணிந்த மணிமுடியை உடைய; துகள் இல் விஞ்சையர் -குற்றம் இல்லாத வித்தியாதரர்கள்;கூடு உறை நீக்கிய -(போர் செய்தல் பொருட்டு) உறையினின்று உருவி எடுத்த;குருதி வாட்களும் -(பகைவரின்) குருதி தோய்ந்த வாட்படைகளையும்;ஆடவர் பெயர்தோறும் -திக்குகளுக்குரிய திக்குப்பாலகர்கள் இடம்விட்டுச் செல்லுந்தோறும்;ஆசை யானையின் -அத்திக்குகளில் உள்ள யானைகளின்; ஓடைகள் ஒளி பிறழ்வனவும் -நெற்றிப் பட்டங்கள் அசைந்து ஒளி புரள்வனவற்றையும்;ஒத்ததே -போன்று விளங்கின. விஞ்சையர் - வித்தியாதரர். பதினெண் தேவ கணங்களுள் ஒரு வகையினர். அவர்கள் குற்றமற்று விளங்குவதால் 'துகளில் விஞ்சையர்' எனப்பட்டனர். மின்னல்களின் தோற்றம் விண்ணில் விஞ்சையர்கள் சுழற்றிய வாள்களில் தோன்றிய ஒளிபோல் விளங்கின. ஆடவர் - இந்திரன் முதலிய எண்திசைக் காவலர். இவ் வெண்மருக்கும் எட்டு யானைகள் உண்டு. அவை ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வ பௌமம், சுப்பிரதீகம் என்பன. இவ்யானைகள் போர்க்குச் செல்லும் போது அவற்றின் நெற்றிப் பட்டம் ஒளி செய்வது மின்னல் ஒளிர்வதற்கு உவமை. 'கதிர்மணி எறிக்கும் ஓடையால், வில் இடும் முகில் எனப் பொழிந்த வேழமே' (741) என்றதுகாண்க. 9 4157. | பிரிந்து உறை மகளிரும், பிலத்த பாந்தளும், எரிந்து உயிர் நடுங்கிட, இரவியின் கதிர் |
|