பக்கம் எண் :

கார்காலப் படலம் 407

கொள்ளுதல் அமைந்த மேகக் கூட்டங்களின்;குமுறல் ஓவின -இடி
முழக்கம் ஒழிந்தன.நீள் அடு கணை என  - நீண்டதாய்ப் பகைவரை
அழிக்கும் அம்புகள் (போர் முடிந்ததும்) எய்யப்படாமை போல;துளியும்
நீங்கின -
மழைத்துளிகளும் (வீழ்தல்) ஒழிந்தன.  வாள் உறை உற்றென -
(போர் முடிந்த அளவில்) வாட்படைகள் உறைகளுள் (செருகப்பட்டு)
மறைந்தாற்போல;மின் எலாம் மறைந்த -மின்னல்கள் எல்லாம் மறைந்தன.

     'மூள்அமர் முற்றுற' என்பதை மூன்று வாக்கியங்களுடன் கூட்டுக.
இதனை முதல் நிலைத்தீவக அணி என்பர்.  போர் முடிந்த அளவில் முரசு
ஒலி அடங்கும், அம்பு மழை ஓயும், வாட்கள் உறையிலிடப்பெறும்.
அவைபோல மழை நீங்கிய அளவில் முகிலின் முழக்கமும், மழைத்தாரைகளும்,
மின்னல்களும் மறைந்தன.  இடிக்கு முரசம் உவமையாதலை 'வென்றி முரசின்
இரங்கி யெழில் வானம்' (கார் நாற்பது 35) என்புழிக் காணலாம்.  'மன்மதன்
மலர்க்கணை வழங்கினால் என, பொன்னெடுங் குன்றின் மேல் பொழிந்த
தாரைகள்' (4162); 'துளித்திவலை காரிடு வில்லிடைச் சரம்என, விசையின்
வீழ்ந்தன' (4163); 'அசைவுறு சிறுதுளி அப்பு மாரியின்' (4171) என்பன
மழைத்துளிகளுக்கு அம்பு உவமையாதலைக் காட்டுவன.  மின்னலுக்கு வாள்
உவமையாதலை 'மின் கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கோட்பினும்' (4161).
என முன்னரும் கூறியுள்ளமை காண்க.  கோள் அமை - கடல் நீரை முகந்து
கொள்ளும் தன்மை.  முதனிலை நீண்ட தொழிற் பெயர்.              106

4254. தடுத்த தாள் நெடுந் தடங் கிரிகள் தாழ்வரை
அடுத்த நீர் ஒழிந்தன; அருவி தூங்கின;
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று,
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே.

     தடுத்த தாள் -குறுக்கிட்டுத் தடுப்பன போன்ற அடிப்பகுதியை உடைய;
நெடுந்தடங்கிரிகள் -
உயர்ந்த பெரிய மலைகள்;தாழ்வரை அடுத்த -
அடிவாரத்தைச் சூழ்ந்து நின்ற;நீர் ஒழிந்தன -நீர் நீங்கப் பெற்றனவாய்;
அருவி தூங்கின -
அருவி மட்டும் ஒழுகப்பெற்றவையாகி;எடுத்த நூல்
உத்தரியத்தொடு -
தரித்த பூணூலாகிய உத்தரியத்துடன்;எய்தி நின்று -
பொருந்தி நின்று;உடுத்த வால் நிறத்துகில் -(தம்மைச்) சுற்றி உடுத்தியிருந்த
வெண்ணிறத்தை உடைய ஆடை;ஒழிந்த போன்றவே -நீங்கிய நிலையை
ஒத்து விளங்கின.

     மழைக்காலத்தில் தாழ்வரையைச் சூழ்ந்த வெள்ளநீர்
அரையாடையாகவும், மலையிலிருந்து பெருகிவரும் அருவிகள் உத்தரியம்
போலவும் விளங்கின.  மழை நீங்கியவுடன் மலையடிவாரத்தில் தங்கிய நீர்
வடிந்துவிட, அருவிகள் மட்டும் ஒழுகின.  அதனால் மலைகள் அரை
ஆடையின்றி, மேலாடையையும் நீக்கிவிட்டு உத்தரியத்தை மட்டும்
அணிந்திருந்தது போலக் காணப்பட்டது.  இல்லறத்தார் அரையில் உடுக்கும்
ஆடையோடு மேல் உத்தரியத்தை அணிவது விதி.  எப்பொழு தேனும்
மேலாடை அணியவில்லையயெனில், அதனால் உளதாகும் குற்றம் நீங்க,
இயல்பாக அணியும் இரட்டைப் பூணூலுடன் உத்தரியத்தின் பொருட்டு
மற்றொரு பூணூலையும் சேர்த்துத் தரித்துக் கொள்வது உண்டு என்பர்.
அருவி பெரிதாய்