மொய்ம்பினோய் -வலிமைமிக்கவனே! சொன்ன எல்லையின் ஊங்கினும் - (முன்பு நான்) குறித்த நான்கு மாதத் தவணை கழிந்த பின்பும்;மன்னன் தூங்கினன் வந்திலன் -அச் சுக்கிரீவ அரசன் தாமதப்படுத்துவதை மேற்கொண்டு இங்கு வந்து சேரவில்லை;செய்த ஆறு என் -அவன் செய்த செயல் தான் என்ன? கார்த்திகை மாதத்தில் வருவதாகச் சொன்ன சுக்கிரீவன் வராததால், இராமன் இலக்குவனைநோக்கிச் சுக்கிரீவன் இவ்வாறு வராமல் காலம் தாழ்த்துகிறானே என்றான் என்பது. தூங்குதல் - செயலைத் தாழ்த்துதல், தாமதப்படுத்துதல், 'தூங்குக தூங்கிச் செயற்பால' என்பதில் (குறள் 672) இப்பொருள் அமைதல் காண்க. முன்னை - முன் பிறந்தவன்; முதன்மையான வீரர்களுள் தலைமையுடையவன். மொய்ம்பு - தோள், வலிமை. 1 4270. | 'பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந் திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்; அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம் மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான். |
பெறல் அருந் திருப் பெற்று -(அந்தச் சுக்கிரீவன்) பெறுதற்கு அருமையான அரச செல்வத்தை (நம்மால்) அடைந்து;உதவிப் பெருந்திறன் -(அவனுக்கு) நாம் செய்த உதவியின் பெயருமையை;நினைந்திலன் - கருதிப் பார்க்கவில்லை;சீர்மையின் தீர்ந்தனன் -(அவன் தனக்குரிய) ஒழுகலாற்றில் தவறிவிட்டான்;அறம் மறந்தனன் - (உதவி செய்தவரை மறவாத) நன்றியாகிய அறத்தை மறந்துவிட்டான்;அன்பு கிடக்க -அவனுக்கு நாம் செய்த அன்புச் செயலை மறந்தது இருக்கட்டும்;நம் மறம் அறிந்திலன் -அவன் நம்முடைய வீரச் செயல்களையும் நினைவிற் கொண்டானில்லை; வாழ்வின் மயங்கினான் -(ஆட்சியில் தன்னை மறந்து இன்பம் அனுபவித்து) வளமான வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கின்றான். பெறல் அருந் திருப் பெற்று' - யாவராலும் பெறுதற்கியலாத அரச பதவியாகிய செல்வத்தைக் குறிக்கும். நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு (4143) என்று இராமனே இவ்வரசைக் குறிப்பிடுகிறான். 'உதவிப் பெருந்திறன்' - 'செய் யாமற் செய்த உதவிக்கு வையகமும், வானகமும் ஆற்றல் அரிது' (குறள். 101) 'காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது' - (குறள். 102) 'சீர்மையின் தீர்ந்தனன்': எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு' - (குறள். 110) மறம் - மறன்: ஈற்றுப் போலி. 2 4271. | 'நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து, ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க் |
|