| தூணிபூட்டி, தொடு சிலை தொட்டு, அருஞ் சேணின் நீங்கினன் - சிந்தையின் நீங்கலான். |
ஆணைசூடி -(இராமனின்) கட்டளையைத் தலைமேற்கொண்டு; அடிதொழுது -அவனது திருவடிகளை வணங்கி;ஆண்டு இறை பாணியாது -அந்த இடத்தில் சிறு நொடியும் தாமதிக்காமல்;படர் வெரிந் -விரிந்த (தனது) முதுகில்;பாழ்படாத் தூணி பூட்டி -(அம்புகள்) குறையாத அம்புப் புட்டிலைக் கட்டிக்கொண்டு;தொடுசிலை தொட்டு -தொடுப்பதில் வல்ல வில்லைக் கையில் பிடித்து;சிந்தையின் நீங்கலான் -மனத்தில் இராமனை நினைந்து கொண்டே;அருஞ் சேணின் நீங்கினன் -செல்வதற்கு அரிய நீண்ட வழியில் சென்றான். இராமன்பால் இலக்குவன் கொண்ட பக்திச் சிறப்பு இப் பாடலாற் புலனாகிறது. சிந்தையின் நீங்கலான் - இராமனது மனத்திலிருந்து நீங்காத அன்புத்தம்பி என்றும் கூறலாம். சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான்: முரண். 9 4278. | மாறு நின்ற மரனும், மலைகளும், நீறு சென்று நெடு நெறி நீங்கிட, வேறு சென்றனன்; மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன் - ஆணையின் ஏகுவான். |
மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன் -சத்தியத்தால் சிறக்கும் வழியில் இயங்குபவனாகிய இராமபிரானின்;ஆணையின் ஏகு வான் - கட்டளைப்படி செல்பவனாகிய இலக்குவன்;மாறுநின்ற மரனும் -குறுக்கே நின்ற மரங்களும்;மலைகளும் -மலைகளும்;நீறு சென்று -(தான் செல்லும் வேகத்தால்) தூளாகி;நெடுநெறி நீங்கிட -நெடிய வழியில் (நீண்ட தூரத்தில்) சென்று பரவும்படியாக;வேறு சென்றனன் -புதுவழி அமைத்துக்கொண்டு சென்றான். பழக்கப்பட்ட வழியன்றாதலின் 'வேறு சென்றனன்' என்றார். காற்றில் பறந்து பரவும் துகள் நெடுந்தொலைவு போகுமாதலின் 'நெடுநெறி' என்றார். 10 4279. | விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை மண் உறப் புக்கு அழுந்தின, மாதிரம்; கண் உறத் தெரிவுற்றது, கட்செவி - ஒண் நிறக் கழல் சேவடி ஊன்றலால். |
|