பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 491

 அறை மணித் தாரினோடு, ஆரம் பார் தொட,
செறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான்.

     பிறிவு அருந் தம்பியும் - பிரியாது எப்போதும் உடனிருக்கும்
தம்பியாகிய இலக்குவனும்;பிரிய -பிரிந்து சென்றதால்;பேருலகு இறுதியில்
-
பெரிய உலகங்கள் யாவும் அழிந்துபடும் ஊழி இறுதியில்;தான் என
இருந்த -
(தனித்து நிற்கும்) திருமாலாகிய தன்னைப் போன்று தனிப்பட்டிருந்த;
ஏந்தலை -
இராமபிரானை; (சுக்கிரீவன்);அறை மணித் தாரினோடு ஆரம் -
(தனது மார்பில் பூண்ட) ஒலிக்கின்ற மணி மாலைகளும் முத்து மாலைகளும்;
பார் தொட -
பூமியில் படும் படி;செறி மலர் சே அடி -அடர்ந்த
செந்தாமரை மலர் போன்ற சிவந்த திருவடிகளை;முடியின் தீண்டினான் -
தனது தலையினால் தொட்டான் (திருவடிகள் சிரத்தில் படுமாறு வணங்கினான்).

     பிரளயத்தின் இறுதியில் திருமால் தனியே தன்னைத் தானே
பார்த்திருத்தலாகிய உண்மை இங்குக் கூறப்பட்டது.  எப்போதும் பிரியாது
உடனுறையும் தம்பியாகிய இலக்குவனையும் பிரிந்து தனித்திருக்கும்
இராமனுக்கு யுகாந்த காலத்தில் தான்மட்டும் தனித்திருக்கும் திருமாலை
உவமைகூறினார்.                                             126

இராமன் சுக்கிரீவனை நலன் உசாவுதல்

4395. தீண்டலும், மார்பிடைத்
     திருவும் நோவுற,
நீண்ட பொன் தடக்
      கையால் நெடிது புல்லினான்;
மூண்டுஎழு வெகுளி
      போய் ஒளிப்ப, முன்புபோல்
ஈண்டிய கருணை தந்து,
     இருக்கை ஏவியே,

     தீண்டலும் -(சுக்கிரீவன் தன்னை) வணங்கியவுடனே;மார்பிடைத்
திருவும் நோவுற -
(இராமன் தனது) திருமார்பில் (இடைவிடாது) உறைகின்ற
திருமகளும் வருந்தும்படி;நீண்ட பொன் தடக் கையால் -நீண்டு தொங்கும்
அழகிய பெரிய கைகளினால்;நெடிது புல்லினான் -அழுந்தத்
தழுவியவனாய்;மூண்டு எழு வெகுளி -(சுக்கிரீவன் மேல்) மூண்டெழுந்த
கோபமானது;போய் ஒளிப்ப -தணிந்துபோக;முன்புபோல் ஈண்டிய
கருணை தந்து -
முன்பு போலவே மிக்க அன்பு பாராட்டி;இருக்கை ஏவி -
(அந்தச் சுக்கிரீவனை) அமருமாறு பணித்து;

     இராமனது சினம் கருணையாக மாறியது; சுக்கிரீவனைக் காணும்
வரையில் அவன்பால் கொண்டிருந்த சினம் இராமனிடம் குடிகொண்டிருந்தது
இங்குக் குறிக்கத்தக்கது.  நெடிது புல்லுதல்: காடாலிங்கனமும உயிருறத்
தழுவுதலும் ஆகும்.                                             127