பக்கம் எண் :

தானை காண் படலம் 499

11.  தானை காண் படலம்

     சுக்கிரீவன் தான் ஒருங்கு திரட்டிய வானரப் படையைக் காட்ட, அதனை
இராமலக்குவர் கண்ட செய்தியைக் கூறும் பகுதி இது.  சேனைத் தலைவர்
தத்தம் படையோடு வந்துசேர்கிறார்கள்; வானர சேனைகளின் ஆற்றலும்
சிறப்பும் வெளிப்படுகின்றன; படைத் தலைவர்கள் சுக்கிரீவனை
வணங்குகின்றார்கள்; அப் படைகளை இராமன் காணுகன்றான்; சுக்கிரீவன்
படைகளை வரன்முறைப்படி காட்டுகிறான்; வானரப் படையின் பெருக்கம்
வெளிப்படுகிறது; அப் படையைக் குறித்து இராமலக்குவர்
உரையாடுகின்றார்கள்.

தானைத் தலைவர் தத்தம் படையுடன் வருதல்

4407. அன்று அவண் இறுத்தனர்;
      அலரி கீழ்த்திசைப்
பொன் திணி நெடு
      வரை பொலிவுறாதமுன்,
வன் திறல் தூதுவர்
      கொணர, வானரக்
குன்று உறழ் நெடும்
      படை அடைதல் கூறுவாம்:

     அன்று அவண் இறுத்தனர் -அன்றைய இரவு முழுவதும் (இராம
லக்குவர்) அந்த இடத்தில் தங்கியிருந்தார்கள்;அலரி கீழ்த் திசை -கதிரவன்
கிழக்குத் திசையிலுள்ள;பொன் திணி நெடுவரை -பொன் மயமான பெரிய
உதய மலையிலே;பொலிவுறாத முன் -விளங்கித் தோன்றாததற்கு முன்பே
(கதிரவன் உதிப்பதற்கு முன்பு);வல் திறல் தூதுவர் -மிக்க வலிமையுடைய
தூதர்கள்;கொணர -சென்று அழைக்க;குன்று உறழ் வானர நெடும்
படை-
மலையைப் போன்ற வானர சேனை;அடைதல் -வந்து சேர்ந்த
விதத்தை;கூறுவாம் -(இனி) எடுத்துச் சொல்வோம்.

     அலரி - பரவுகின்ற கதிர்களையுடையவனெனச் சூரியனுக்குக் காரணம்
குறியாயிற்று.                                                   1