4415. | இடியும், மாக் கடல் முழக்கமும் வெருக் கொள இசைக்கும் முடிவு இல் பேர் உறுக்கு உடையன, விசையன, முரண, கொடிய கூற்றையும் ஒப்பன, பதிற்றைந்து கோடி நெடிய வானரப் படை கொண்ட புகுந்தனன் - நீலன். |
நீலன் -நீலன் என்பவன்;இடியும் மாக் கடல் முழக்கமும் - இடியோசையும் பெரிய கடலின் ஆரவாரமும்;வெருக் கொள -அஞ்சி அடங்கும்படி;இசைக்கும் -ஒலிக்கின்ற;முடிவு இல் பேர் உறுக்கு உடையன -எல்லையற்ற பேராரவாரத்தை உடையனவும்;விசையன -மிக்க வேகத்தையுடையனவும்;முரண -வலிமையுடையனவும்;கொடிய கூற்றையும் ஒப்பன -கொடுமையுள்ள யமனைப் போன்றனவுமாகிய;பதிற்றைந்து கோடி-ஐம்பது கோடி;நெடிய வானரப் படை கொண்டு -பெரிய வானர சேனையை உடன் கொண்டு;புகுந்தனன் - வந்து சேர்ந்தான். நீலன்: அக்கினியின் மகன்; இவன் வானர சேனைகள் எல்லாவற்றிற்கும் முதல் தலைவன். பத்து + ஐந்து : பதிற்றைந்து - இற்றுச் சாரியை பெற்ற ஐம்பதைக் குறிக்க வந்த பண்புத் தொகை. கொடுமையிலும் உயிர் கவர்வதிலும் கூற்று உவமை. 9 4416. | மா கரந்தன, உரத்தன, வலியன, நிலைய, வேகரத்த, வெங் கண் உமிழ் வெயிலன, மலையின் ஆகரத்தினும் பெரியன, ஆறு - ஐந்து கோடி சாகரத்தோடு்ம் - தரீமுகன் என்பவன் - சார்ந்தான். |
தரீமுகன் என்பவன் -தரீமுகன் என்னும் வீரன்;மா கரந்தன - பெரிய கைகளையுடையனவும்;உரத்தன -வலிய மார்பையுடையனவும்; வலியன -தேக வலிமையுடையனவும்;நிலைய -(செயலில்) உறுதியுள்ளனவும்;வேகரத்த -உக்கிரமுடையனவும்;வெம்கண் உமிழ் வெயிலன -கொதிக்கும் கண்களிலிருந்து தெறிக்கின்ற தீப் பொறிகளையுடையனவும்;மலையின் ஆகரத்தினும் பெரியன -மலை யின் வடிவத்தைக் காட்டிலும் பெரிய வடிவமுடையனவுமான;ஆறு ஐந்து கோடி - முப்பது கோடி;சாகரத் தொடும் -வானர சேனைக் கடலோடும்; சார்ந்தான்-வந்து சேர்ந்தான். |