பக்கம் எண் :

504கிட்கிந்தா காண்டம்

4415. இடியும், மாக் கடல் முழக்கமும்
      வெருக் கொள இசைக்கும்
முடிவு இல் பேர் உறுக்கு
      உடையன, விசையன, முரண,
கொடிய கூற்றையும் ஒப்பன,
      பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படை கொண்ட
      புகுந்தனன் - நீலன்.

     நீலன் -நீலன் என்பவன்;இடியும் மாக் கடல் முழக்கமும் -
இடியோசையும் பெரிய கடலின் ஆரவாரமும்;வெருக் கொள -அஞ்சி
அடங்கும்படி;இசைக்கும் -ஒலிக்கின்ற;முடிவு இல் பேர் உறுக்கு
உடையன -
எல்லையற்ற பேராரவாரத்தை உடையனவும்;விசையன -மிக்க
வேகத்தையுடையனவும்;முரண -வலிமையுடையனவும்;கொடிய கூற்றையும்
ஒப்பன -
கொடுமையுள்ள யமனைப் போன்றனவுமாகிய;பதிற்றைந்து
கோடி-
ஐம்பது கோடி;நெடிய வானரப் படை கொண்டு -பெரிய வானர
சேனையை உடன் கொண்டு;புகுந்தனன் - வந்து சேர்ந்தான்.

     நீலன்: அக்கினியின் மகன்; இவன் வானர சேனைகள் எல்லாவற்றிற்கும்
முதல் தலைவன்.  பத்து + ஐந்து : பதிற்றைந்து - இற்றுச் சாரியை பெற்ற
ஐம்பதைக் குறிக்க வந்த பண்புத் தொகை.  கொடுமையிலும் உயிர்
கவர்வதிலும் கூற்று உவமை.                                      9

4416.மா கரந்தன, உரத்தன,
      வலியன, நிலைய,
வேகரத்த, வெங் கண்
      உமிழ் வெயிலன, மலையின்
ஆகரத்தினும் பெரியன,
     ஆறு - ஐந்து கோடி
சாகரத்தோடு்ம் - தரீமுகன்
      என்பவன் - சார்ந்தான்.

     தரீமுகன் என்பவன் -தரீமுகன் என்னும் வீரன்;மா கரந்தன -
பெரிய கைகளையுடையனவும்;உரத்தன -வலிய மார்பையுடையனவும்;
வலியன -
தேக வலிமையுடையனவும்;நிலைய -(செயலில்)
உறுதியுள்ளனவும்;வேகரத்த -உக்கிரமுடையனவும்;வெம்கண் உமிழ்
வெயிலன -
கொதிக்கும் கண்களிலிருந்து தெறிக்கின்ற தீப்
பொறிகளையுடையனவும்;மலையின் ஆகரத்தினும் பெரியன -மலை யின்
வடிவத்தைக் காட்டிலும் பெரிய வடிவமுடையனவுமான;ஆறு ஐந்து கோடி -
முப்பது கோடி;சாகரத் தொடும் -வானர சேனைக் கடலோடும்;
சார்ந்தான்-வந்து சேர்ந்தான்.