வாடிய இராமனிடம் புதிய தென்பு பிறந்தது என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது 'தளிர்ப்பான்' என்ற சொல்லாட்சி. தளிரே மரம் செடிகளின் எதிர்கால வளத்தைப் புலப்படுத்துமன்றோ? சேனைப் பரப்பு முழுவதும காண்பதற்கு ஒரு மலைச் சிகரமே பொருந்துமென்பது கவிஞர்குறிப்பு. 29 4436. | அஞ்சோடு ஐ - இரண்டு யோசனை அகலத்தது ஆகி, செஞ்செவே வட திசைநின்று தென் திசை செல்ல, எஞ்சல் இல் பெருஞ் சேனையை, 'எழுக' என ஏவி, வெஞ் சினப் படை வீரரை உடன் கொண்டு மீண்டான் * |
அஞ்சொடு ஐ இரண்டு யோசனை -பதினைந்து யோசனைப் பரப்பளவு;அகலத்தது ஆகி -அகலம் உடையதாய்;செஞ்சேவே -நேராக; வடதிசை நின்று -வடக்கிலிருந்து;தென்திசை செல்ல -தெற்கு நோக்கிச் செல்வதற்கு;எழுக என -புறப்படுக என்று;எஞ்சல் இல் பெருஞ்சேனையை -குறைவற்ற பெரிய வானரப் படையை;ஏவி -ஏகுமாறு கட்டளையிட்டு;வெஞ்சினப் படை வீரரை உடன் கொண்டு -கொடிய சினம் உள்ள வானரப்படைத் தலைவரைத் தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டு;மீண்டான் -சுக்கிரீவன் இராமனிடம் திரும்பவும் வந்து சேர்ந்தான். படை நடைபோட்டுச் செல்லும்போது இராமபிரான் ஒரே இடத்திலிருந்து பார்ப்பதற்குச் சுக்கிரீவன் ஏற்பாடு செய்ததை இப்பாடல் புலப்படுத்துகின்றது. எழுக + என = எழுகென: (அகரம்) தொகுத்தல்விகாரம். 30 சுக்கிரீவன் இராமனுக்குத் தானையை வரன்முறைப்படி காட்டுதல் 4437. | மீண்டு, இராமனை அடைந்து, 'இகல் வீரருள் வீர! காண்டி, நீ' என்று, வரன்முறை தெரிவுறக் காட்டி, ஆண்டு இருந்தனன்; ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே, ஈண்டு சேனை, பால் எறி கடல் நெறி படர்ந்தென்ன. * |
(சுக்கிரீவன்)மீண்டு இராமனை அடைந்து -திரும்பவும் இராம னிடம் வந்து (அவனை நோக்கி); 'இகல் வீரருள் வீர -வலிமை பொருந்திய வீரர்களுள்ளே சிறந்த வீரனே!நீ காண்டி என்று -நீ காண்பாய் என்று; வரன் முறை தெரிவுறக் காட்டி -சேனைகளை |