பக்கம் எண் :

தானை காண் படலம் 519

பெருமை வாய்ந்த இளைய பெருமாளைப் பார்த்து;உரை செய்வதானான் -
(அச் சேனைபற்றிக்) கூறத் தொடங்கினான்.

     நாகர் - தானியாகுபெயர் (பாதாள உலகம்); படமும் வாலும் உடையராய்
மனிதர் போன்ற உருவமும் தெய்வத் தன்மையுமுடைய பாம்புச் சாதியார்.  'தீம்
புனல்': உலகைச் சூழ்ந்து நிற்பது உவர்க் கடலே யெனினும் மக்களுக்க மிக
இன்றியமையாத உணவிற்குச் சுவையளிக்கும் உப்பை விளைவித்தலால்
'தீம்புனல்' என்றார்.  உப்பு என்ற சொல்லுக்கே சுவை என்னும் பொருள்
உண்டு.  தன்துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் (3968), கூடடு
ஒருவரையும் வேண்டாக் கொற்றவ (4029), துணை இலான் (6226) என்ற
தொடர்கள் ஒப்பிட்டு உணரத்தக்கன.                               34

4441.'அடல்கொண்டு ஓங்கிய சேனைக்கு,
      நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம்: இனி முடிவு
      உள காணுமாறு உளதோ? -
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்! -
     மண்ணிடை மாக்கள்,
''கடல் கண்டோம்'' என்பர்; யாவரே
      முடிவு உறக் கண்டார்?

     மடல்கொண்டு ஓங்கிய அலங்கலாய் -இதழ்கள் நிறைந்து சிறந்த
மாலையை அணிந்தவனே!நாமும் நம் அறிவால் -நாம் இருவரும் நமது
அறிவு கொண்டு;அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு -வலிமை பெற்றுச்
சிறந்துள்ள இந்த வானரப் படையின்;உடல் கண்டோம் -நடுவிடத்தை
ஓரளவு பார்த்தோம் (அல்லாமல்);இனி உள -இனி இதற்குள்ள;முடிவு
காணுமாறு உளதோ -
முடிவெல்லையைக் காணும் வகை ஏதேனும்
உண்டோ?மண் இடை -இந் நிலவுலகத்தில்;மாக்கள் -மனிதர்கள்;கடல்
கண்டோம் என்பர் -
கடலைப் பார்த்தோம் என்று சொல்வார்கள் (ஆனால்);
முடிவு உறக் கண்டார் யாவரே -
அக்கடலின் முடிவெல்லையைக்
கண்டறிந்தவர் யார்தாம்?

     கடலைக் காண்பவர் அதன் ஒரு பகுதியை மட்டும் காண்பாரேயல்லாமல்
அதன் முடிவெல்லையைக் காணமாட்டார்கள்; அதைப்போல நாமும்
இச்சேனைக் கடலின் ஒரு பகுதியை மட்டும் கண்டோமேயல்லாமல் இதன்
முடிவெல்லையைக் காணமுடியாதுஎன்பது.

     சேனைக்கு: உருபு மயக்கம்.                                  35

4442.'ஈசன் மேனியை, ஈர் - ஐந்து
      திசைகளை, ஈண்டுஇவ்
ஆசு இல் சேனையை,
      ஐம்பெரும் பூதத்தை, அறிவை,