பக்கம் எண் :

நாட விட்ட படலம் 523

12.  நாட விட்ட படலம்

     இராமபிரான் கட்டளைப்படி சுக்கிரீவன் சீதையைத் தேடும்படி வானரப்
படைத் தலைவர்களை எல்லாத் திசைகளிலும் விடுத்த
செய்தியையுணர்த்துவதைக் கூறும் படலம் இது.

     படையளவு பற்றிச் சுக்கிரீவனும் இராமனும் உரையாடுகின்றார்கள்;
இராமன் இனி நடக்க வேண்டுவன குறித்துச் சிந்தனை செய்க என்று
சுக்கிரீவனிடம் கூறுகிறான்; அச்சுக்கிரீவன் அனுமனைஅங்கதன்
முதலியவர்களுடன் தென்திசைக்கு அனுப்புகிறான்; பிற திசைகளுக்கு
மற்றவர்களை அனுப்புகிறான்; ஒரு திங்களுக்குள் தேடித் திரும்பிவருமாறு
அவர்களுக்கு ஆணையிடுகிறான்; மேலும் தென்திசை செல்லும் வானர
வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுகிறான்; இராமனோ, அனுமனுக்குச் சீதையின்
அங்க அடையாளங்களைக் கூறுகிறான்; இராமன் அனுமனுக்கு உரைத்த
அடையாளச் செய்திகள் சுட்டிக் காட்டப்படுகின்றன; பின்னர் இராமன்
மோதிரம் அளித்து விடைகொடுத்து அனுமனை அனுப்புகிறான்.

படையின் அளவு பற்றி இராமனும் சுக்கிரீவனும் உரையாடல்

கலிவிருத்தம்

4447.'வகையும், மானமும், மாறு
      எதிர்ந்து ஆற்றுறும்
பகையும் இன்றி, நிரைந்து
      பரந்து எழும்
தகைவு இல் சேனைக்கு,
      அலகு சமைந்தது ஓர்
தொகையும் உண்டுகொலோ?'
      எனச் சொல்லினன்.

     'வகையும் -ஆராய்தலும்;மானமும் -ஒப்புமையும்;மாறு எதிர்ந்து
ஆற்றுறும் பகையும் -
எதிர்த்துச் செயல்படக்கூடிய பகைவரும் இன்றி -
இல்லாமல்;நிரைந்து -வரிசையாக அமைந்து;பரந்து எழும் -விரிவாகப்
பரவி எழுந்துள்ளதும்;தகைவு இல் சேனைக்கு -தடுப்பதற்கு எவரும்
இல்லாததுமான சேனைக்கு;அலகு சமைந்தது ஓர் தொகையும்
உண்டுகொலோ -
அளவு கொண்டு சொல்லக்கூடிய ஓர் எண்ணிக்கையும்
உண்டோ';என -என்று இராமன் வினவ;சொல்லினன் -சுக்கிரீவன்
பின்வருமாறு சொன்னான்.