வாயுவைப் போல;புக்கு உழல் -புகுந்து செல்கின்ற;தவன வேகத்தை - (உனது) மிக்க வேகத்தை;ஓர்கிலை -உணரமாட்டாமல்;தாழ்த்தனை - வீணே தாமதிருத்திருக்கின்றாய்;கவன மாக் குரங்கின் -விரைந்து செல்லக்கூடிய பெரிய குரங்குகளின்;செயல் காண்டியோ -ஆற்றல் மிக்க செய்கையைக் காண விரும்புகின்றாயோ? மூவுலகத்திலும் இயங்கும் வல்லமை பெற்றிருந்தும் நீ இப்போது சீதையை நாடிச் செய்தி தெரிந்து வராமல் வீணே நாள் கடத்துவது, மற்றை வானரர்கள் சீதையைத் தேடும் திறத்தில் என்ன செய்கின்றார்கள் என்று காணக் கருதுகிறாய் போலும் எனச் சுக்கிரீவன் அனுமனை நோக்கி்க் கூறினான் என்பது, தவன வேகம் - ஒருபொருட் பன்மொழி. வேகத்தை (வேகத்தை உடைய நீ) - முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று . 5 4452. | 'ஏகி, ஏந்திழைதன்னை, இருந்துழி, நாகம் நாடுக; நானிலம் நாடுக; போக பூமி புகுந்திட வல்ல நின் வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால். |
ஏகி -(நீ இங்கிருந்து) சென்று;ஏந்திழை இருந்துழி தன்னை - அணிகளையுடையவளாகிய சீதை இருக்கும் இடத்தை;நாகம் நாடுக - நாகர்கள் உறையும் பாதலத்தில் சென்று தேடுவாய்;நானிலம் நாடுக - பூமியிலும் தேடுவாய்;போக பூமி புகுந்திட வல்ல நின் வேகம் -போக பூமியான சொர்க்கலோகத்திற்கும் செல்ல வல்லமையுள்ள உனது வேகமும்; ஈண்டு வெளிப்பட வேண்டும் -இப்போது வெளியாக வேண்டும். 'நீ மூவுலகங்களிலும் சென்று சீதையைத் தேட வேண்டு'மென்று சுக்கிரீவன் அனுமனுக்குக் கூறினான் என்பது. ஏந்திழை: அன்மொழித் தொகை. இருந்துழி: தொகுத்தல் விகாரம். போகபூமி: உயிர்கள் புண்ணிய மிகுதியால் சென்று போகங்களைத் துய்க்கும் சுவர்க்கம். 6 4453. | 'தென் திசைக்கண், இராவணன் சேண் நகர் என்று இசைக்கின்றது, என் அறிவு, இன்னணம்; வன் திசைக்கு, இனி, மாருதி நீ அலால், வென்று, இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ? |
இராவணன் சேண் நகர் -இராவணனுடைய நீண்ட பெரிய இலங்காபுரி; தென்திசைக்கண் -தெற்குத் திசையில் (உள்ளது);என்று -என்று;என் அறிவு இன்னணம் இசைக்கின்றது -எனது நினைவு |