இரத்தினங்களின் ஒளியால் இருள் விலகுவதற்குக் காரணமான; நருமதை உன்னுவீர் -நருமதையாற்றைச் சென்று அடைவீர். நருமதை நதி: கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஓர் ஆறு; தேவர்கள் நீராடும் தெய்வீகமும் வண்டுகள் இசைபாடும் சூழல் இனிமையும், மணியொளியால் இருள் நீங்கும் செல்வ வளமும் அந்த நருமதை நதிக்கு உள்ளதெனக் கற்பனை செய்தமை நயமானது. ஐந்து - பஞ்சமம்: ஏழு சுரங்களுள் இது ஐந்தாவது. அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது - சொல்நயம். 13 4460. | 'வாம மேகலை வானவர் மங்கையர், காம ஊசல் களி இசைக் கள்ளினால், தூம மேனி அசுணம் துயில்வுறும் ஏமகூடம் எனும் மலை எய்துவீர். |
(அங்கிருந்து)வாம மேகலை வானவர் மங்கையர் -அழகிய மேகலையணிந்த தேவ மாதர்கள்;காம ஊசல் -விருப்பத்தோடு ஊஞ்சல் ஆடும்போது;களி இசைக் கள்ளினால் -மகிழ்ச்சியால் பாடுகின்ற இசையாகிய மதுவால்;தூம மேனி அசுணம் - புகை போன்ற கரிய நிறமுடைய அசுணமாப் பறவைகள்;துயில்வுறும் -தூங்குவதற்கு இடமான; ஏம கூடம் எனும் மலை எய்துவீர் -ஏமகூடம் என்னும் மலையைப் போய்ச் சேருங்கள். ஏமகூட மலையில் தேவமாதர்கள் வந்து ஊஞ்சலாடும்போது களிப்பினால் பாடுகினற இசைப் பாடலால் அசுணப் பறவை தூங்கும் என்பது. அசுணம் - இசையுணர்வுடைய பறவை; விலங்கு என்றும் கூறுவர். அரமங்கையர்: மரூஉ. (அமர மங்கையர்). ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில் ஒன்று. வாமம் - அழகு. 14 4461. | 'நொய்தின், அம் மலை நீங்கி, நுமரொடும் பொய்கையின் கரை பிற்படப் போதிரால்; செய்ய பெண்ணை, கரிய பெண்ணைச் சில வைகல் தேடி, கடிது வழிக்கொள்வீர். |
நொய்தின் -விரைவாக;அம்மலை நீங்கி -அந்த ஏமகூட மலையை விட்டு அகன்று;நுமரொடும் -உங்களைச் சேர்ந்த வானரர் களுடனே; பொய்கையின் கரை -(அங்குள்ள) தடாகத்தின் கரையானது;பிற்படப் போதிர் -பின்னாகும்படி (அதை விட்டு) அப்பாலே செல்லுங்கள்;செய்ய பெண்ணை -(மகளிர்க்குரிய) நற் பண்புகளைக் கொண்ட சீதையை;கரிய பெண்ணை -கரிய பெண்ணை நதியின் இடங்களில்;சில வைகல் தேடி - சில நாட்கள் தேடிப் பார்த்து;கடிது வழிக்கொள்வீர் -விரைந்து மேலே செல்லுங்கள். செய்ய பெண்ணை கரிய பெண்ணை - முரண் தொடை. வைகல் - கழியும் தன்மையுடையது: காரணப்பெயர். நொய்து, கடிது: விரைவுபற்றி வந்த வினையுரிகள். 15 |