| பா வரும் கிழமைத் தொன்மைப் பருணிதர் தொடுத்த, பத்தி நா அருங் கிளவிச் செவ்வி நடை வரும் நடையள் -நல்லோய்! |
நல்லோய் -நற்பண்புகளால் சிறந்தவனே!பூ வரும் -தாமரைப் பூவில் வாழும் தன்மையுள்ள;மழலை -மழலைச் சொற்களையுடைய;அன்னம் - அன்னப் பறவையும்;புனை மடப் பிடி -அழகிய இளைய பெண் யானையும்; என்ற இன்ன -என்று சொல்லப்பட்ட இவை;தேவரும் மருளத்தக்க செலவின -தேவர்களும் கண்டு திகைக்கக் கூடிய (சிறந்த) நடையையுடையன; எனினும் -என்றாலும்;தேறேன் -(அவற்றைச் சீதையின் நடைக்கு உவமையாகக் கூறத்) தெளிவு கொள்ளேன்;பா வரும் -செய்யுள் இயற்றுவதில் பொருந்திய;கிழமைத் தொன்மைப்பருணிதர் -உரிமையுடைய பழமையான (புலமை மிக்க) புலவர்கள்;தொடுத்த -இயற்றிய;பத்தி - ஒழுங்கான;நா அரும் கிளவி -நாவில் எழுகின்ற அரிய சொற்களையுடைய; செவ்வி நடை வரும் நடையள் -காவியங்களின் அழகிய நடையை ஒத்த நடையையு டையவளாவாள். உலகத்துப் பெண்கள் நடைக்கு உவமையாகக் கூறப்படுகின்ற அன்னப் பறவை முதலியவற்றின் நடையைச் சீதையின் நடைக்கு ஒப்பாகுமென்று நான் சிறிதும் கருதமாட்டேன்; பழைய புலமை மிக்க புலவர்கள் இயற்றியுள்ள காவியங்களின் நடை ஒப்பற்று விளங்குவதுபோல இந்தச் சீதையின் நடையும் ஒப்பற்று விளங்கும் என்பது. நடை வரு நடை - வரு: உவமஉருபு. நூலிலும் நடையுண்டு; பெண்களுக்கும் நடையுண்டு ஆதலால், நூலின் நடை சீதையின் நடைக்கு உவமை கூறப்பட்டது. பருணிதர் - புலவர். 64 4511. | 'எந் நிறம் உரைக்கேன்? - மாவின் இள நிறம் முதிரும்; மற்றைப் பொன் நிறம் கருகும்; என்றால், மணி நிறம் உவமை போதா; மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படா ஒலிக்கும்; வேண்டின், தன் நிறம் தானே ஒக்கும்; மலர் நிறம் சமழ்க்கும் அன்றே! |
மாவின் இள நிறம் முதிரும் -(சீதையின் மேனி நிறத்திற்கு உவமை வேண்டுமானால்) மாமரத்தின் இளந்தளிரினது நிறம் முதிர்ந்து மாறும் இயல்பினது;பொன் நிறம் கருகும் -பொன்னின் நிறமும் (இவள் நிறத்துக்கு முன்பு) கறுத்துத் தோன்றும் (ஆகையால் மாந்தளிர் நிறம் முதலியன உவமையாகா; அவ்வாறே);மணி நிறம் உவமை போதா -இரத்தினங்களின் நிறமும் உவமையாவதற்கு ஏற்ற ஒளியுடையதாகாது;மின் நிறம் நாணி - மின்னலின் நிறமோ? (சீதையின் |