வருணனையும் வேறு சில குறிப்புகளையும் இப் பாடல்களில் காண முடிகிறது. பாதாதி கேச வருணனை தெய்வப் பாத்திரங்களுக்கு உரியது என்ப தொருமரபு உண்டு. அவ்வகையில் இப்பாடல்களைக்கவி மரபாகமட்டும் கொண்டு ஏற்கலாமெனத் தோன்றுகிறது. 4483 ஆம்பாடலுக்கு உரிய விளக்கத்தில், 'இம் மாதிரியான உறுப்பிலக்கண வருணனை மிகையென்று கூறுமவர், சாமுத்திரிக இலக்கணத்தைக் கூறவேண்டுவது சிறந்த கவிஞரின் பொறுப்பென்பதைக் கருத்துட் கொள்க' என்று அமைதி கூறப்பட்டுள்ளது. (ஐயரவர்கள் நூலகப் பதிப்பு - கிட்கிந்தா காண்டம் - பக் 768) உறுப்பு வருணனை - அதுவும் பிராட்டி போன்ற தெய்வத் திறமுடையார் பற்றிய உறுப்பு வருணனையில் ஒருவகை நெறிமுறை வேண்டாவா என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. கண்ணகியாரின் உறுப்பு வருணனையில் கோவலன் ஈடுபடுவதாகச் சிலப்பதிகாரம் பேசும். ஆனால், அந்த வருணனை அந்தப்புர வருணனையாய் - வரம்பு கடவாமல் இருப்பது. இளங்கோவடிகள் காலத்துக்குப் பின் செல்வாக்குப் பெற்ற கவி மரபின் கொடுமைக்கு இந்தப் பகுதியை எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும் போலும். அற்புதக் கற்பனை வளம் செறிந்த வருணனைதான்; என்றாலும், பிறன் ஓர் ஆடவனிடம் பிரித்துரைக்கத் தக்கதோ என்று கலைஞர்களும் ஆய்வாளர்களும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. பிராட்டியின் பாத்திரப் படைப்பில் உள்ள ஓர் உணர்வு இங்கே நினையத்தக்கது. மனத்தில் எவ்விதக் களங்கமும் இல்லா நிலையில் அனுமன் பிராட்டியை அசோகவனத்திலிருந்து தன் தோளில் சுமந்து செல்ல முன் வந்த போது, வேறும் உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய்! ஏறு சேவகன் மேனி அல்லால், இடை ஆறும் ஐம்பொறி நின்னையும், ''ஆண்'' எனக் கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ? (5363) என்றெழுந்த பிராட்டியின் சொல்லை நினைந்து பார்க்க வேண்டும். இத்துணை மென்மை நாகரிகப் பிராட்டியின் உறுப்பு வருணனை போகும் பாங்கினை எண்ணின், கவி மரபின் பெருங் கொடுமைத் திறம் வேதனை தருகிறது. மற்றொரு குறிப்பு: இப்பாடல்களை விடுத்துப் படித்தாலும் செய்தித் தொடர்பு விடவில்லை என்பதையும் கருதிப் பார்க்கலாம். வான்மீகமும் இந்த வருணனை தரவில்லை. உருப் பொலிவை விட உள்ளப் பண்பின் பொலிவே போற்றத்தக்கது என்ற விருப்பம் கொண்டு கணித்தால் இனிவரும் பாடல்களே நய நாகரிக உணர்வின் இமயமாவதை உணர முடிகிறது. சான்றோர் சிந்தனைக்கு உரிய இடம் இது. 66 இராமன் புகன்ற அடையாளச் செய்திகள் கலிவிருத்தம் 4513. | 'முன்னை நாள், முனியொடு, முதிய நீர் மிதிலைவாய், சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை, அக் |
|