இராமனிடம் சொல்லியிருக்கக் கூடுமாதலால் இங்கு அடையாளமாக அது குறிக்கப் பெற்றது. 68 4515. | 'சூழி மால் யானையின் துணை மருப்பு இணை எனக் கேழ் இலா வன முலைக் கிரி சுமந்து இடைவது ஓர் வாழி வான் மின் இளங் கொடியின் வந்தாளை, அன்று, ஆழியான் அரசவைக் கண்டதும் அறைகுவாய். |
சூழி மால் யானையி்ன் -முகபடா மணிந்த மதம் பிடித்த ஆண் யானையினது;துணை மருப்பு இணையென -ஒன்றோடு ஒன்று ஒத்து விளங்கும் இரண்டு தந்தங்கள் என்று கூறும்படி;கேழ் இலா -(அவற்றிற்கு) ஒப்பாகாத;வனம் முலைக்கிரி -அழகிய முலைகளாகிய மலைகளை;சுமந்து -தாங்கி;இடைவது -(பாரத்தைப் பொறுக்க முடியாமல்) ஒடிவதாகிய;ஓர் வானமின் இளங்கொடியின் -ஒப்பற்ற வானத்திலுள்ள மின்னலின் இளங்கொடி போல;வந்தாளை -வந்த வளாகிய சீதையை;அன்று -அக் காலத்தில்;ஆழியான் அரசவைக் கண்டதும் -ஆணைச் சக்கரமுடைய சனக மன்னனது சபையில் பார்த்ததையும்;அறைகுவாய் -சொல்வாய். முலைக் கிரியைச் சுமக்கும் மின்னிளங் கொடி சீதைக்கு, இல்பொருளுவமை. சூழி: யானையின் முகத்திடும் அணி. வாழி - அசை. 69 4516. | 'முன்பு நான் அறிகிலா முளி நெடுங் கானிலே, ''என் பினே போதுவான் நினைதியோ, ஏழை நீ? இன்பம் ஆய், ஆர் உயிர்க்கு இனியை ஆயினை, இனித் துன்பம் ஆய் முடிதியோ?'' என்றதும் சொல்லுவாய். |
ஏழை-மடமைப் பண்பு மிக்கவளே!நீ - நீ;முன்பு நான் அறிகிலா- இதுவரை நான் கண்டறியாத;முளிநெடுங் கானிலே -தீய்ந்து போன பெரிய காட்டிலே;என் பினே போதுவான் -என்னைப் பின் தொடர்ந்து வருமாறு; நினைதியோ -கருதுகின்றாயோ?இன்பம் ஆய் -(இதுவரை நீ எனக்கு) மகிழ்ச்சியைத் தந்தவளாயிருந்து;ஆர் உயிர்க்கு -(எனது) பெறுதற்கு அருமையான உயிருக்கும்;இனியை ஆயினை - |