14. ஆறு செல் படலம் வானர வீரர்கள் பிலத்திலிருந்து வெளிவந்த பின்பு, சுக்கிரீவன் குறிப்பிட்ட வழியை சீதையைத் தேடிச் சென்றதைக் கூறும் படலம். (ஆறு - வழி) பொய்கைக் கரையில் வானரர் உறங்கத் துமிரன் வருகிறான்; அவ் அசுரன் அங்கதனை மார்பிலறைகிறான்; அங்கதனும் திருப்பியறைய, அந்த அசுரன் அலறி வீழ்கிறான். அந்த அசுரனைக் குறித்து அனுமன் வினாவுகிறான்; அதற்கு அங்கதன் விடை கூறுகிறான். பின், சாம்பவான் துமிரனது வரலாறு கூறுகிறான். பின்னர், வானரர் சீதையைத் தேடிப் பெண்ணையாற்றை அடைகிறார்கள்; அதன்பிறகு அவர்கள் தசநவ நாடு அடைகிறார்கள்; விதர்ப்ப நாட்டில் தேடுகிறார்கள்; தண்டக வனத்தில் துருவி, முண்டகத் துறையை அடைகிறார்கள்; பாண்டு மலையின் சிகரத்தை அடைந்து, அங்கிருந்து கோதாவரியைச் சென்றடைகிறார்கள்; பின்னர்ச் சுவணகத் துறையில் அவர்கள் புகுந்து குலிந்த தேசத்தைக் கடக்கின்றார்கள்; கடந்து அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து வேங்கட மலையைச் சேர்கின்றார்கள்; அங்கிருந்து தொண்டை நாட்டை அடைகின்றார்கள்; பிறகு சோழநாட்டை அடைந்து மலைநாட்டின் வழியாகப் பாண்டிநாடு அடைகின்றார்கள்; முடிவாக, மயேந்திர மலையைச் சென்று அடைகின்றார்கள். பொய்கைக் கரையில் வானரர் உறங்கும்போது துமிரன் வருதல் கலித்துறை 4594. | கண்டார், பொய்கைக் கண் அகல் நல் நீரைக் கரை தாம் உற்று, உண்டார், தேனும் ஒண் கனி காயும்; ஒரு சூழல், கொண்டார் அன்றோ, இன்துயில்; கொண்ட குறி உன்னி, தண்டா வென்றித் தானவன் வந்தான், தகவு இல்லான். |
கண்டார் -(அப் பொய்கையைக்) கண்ட வானரவீரர்கள்;பொய் கைக் கண் -அந்தப் பொய்கையிலுள்ள;அகல்நீர்க் கரைதாம் உற்று - நீர்வளமுள்ள அகன்ற கரையையடைந்து;தேனும் ஒண்கனி காயும் உண்டார் -தேனையும் நல்ல பழங்களையும் காய்களையும் தின்றார்கள்;ஒரு சூழல் - அப் பொய்கையின் ஒரு பக்கத்தில்;இன்துயில் கொண்டார் -இனிய உறக்கத்தை மேற்கொண்டார்கள்;கொண்ட குறி |